Wednesday, June 4, 2014


சித்தர் நெறி - Part 2 of 2




(இதைப் படிக்கும் முன் சித்தர் நெறி - Part 1 of 2 பகுதியைப் படிக்கவும்!)



சித்துகள்

‘சித்து’ எனப்படும் இயற்கை மீறிய (மீஇயற்கை) ஆற்றல் கைவரப் பெற்றவர்களாகச் சித்தர்கள் இருந்தனர் என்பதை அவர்களைப் பற்றிய செய்திகள் பலவும் வலியுறுத்துகின்றன. இதன் அடிப்படையில், ‘சித்துகள் கைவரப் பெற்ற அனைவரும் சித்தர்கள்’ என்று தீர்மானிக்க முயல்வது பொருந்தாது. அது உண்மைக்கு மாறானதுங்கூட.

சித்துகள் பொதுவாக எண் வகைப்படும். அவற்றை

அணிமா,
மகிமா,
லகிமா,
கரிமா,
பிராத்தி,
பிரகாமியம்,
ஈசாத்துவம்,
வசித்துவம்

என்று வடமொழியில் கூறுவர்.




இவற்றைத் தமிழில் முறையே

அணுவைப் போல் நுண்மையாதல் - அணிமா,
மிகப் பெரியதாதல் - மகிமா,
மிக நுண்மையாதல் - லகிமா,
மிக எடையாதல் - கரிமா
எங்கும் செல்லும் ஆற்றல் - பிராத்தி,
எண்ணியது எய்தும் ஆற்றல் - பிரகாமியம்,
எதையும் ஆக்கும் ஆற்றல் - பிரகாமியம்,
எவரையும் தன்வயப்படுத்தும் ஆற்றல் - வசித்துவம்

எனக் கூறலாம்.

இராமலிங்க சுவாமிகள் கரும சித்தி, யோக சித்தி, ஞான சித்தி எனச் சித்துக்களை முப்பெரும் பிரிவுகளாக்கிக் கூறுகின்றார். மரபாகச் சொல்லப்படும் எண்வகைச் சித்திகளும், தேகத்தைக் கல்பசித்தி செய்தலும் கரும சித்தி எனப்படும்.

இச்சித்துகளின் கால அளவு மூன்றே முக்கால் நாழிகை முதல் மூன்றே முக்கால் ஆண்டுகள் வரை என்பர். பிராண கல்பதேகி புதைந்த தேகத்தைக் கெடுமுன் உயிர்ப்பித்தல் போன்ற அறுபத்து நான்கு சித்திகளை யோக சித்தி என்பர். இது பிற சித்துகளை உள்ளடக்கியது; பிற சித்திகளைக் காட்டிலும் பெருமை வாய்ந்தது. சித்துகளின் எண்ணிக்கை பலகோடி எனும் குறிப்பு திருவருட்பாவில் பல இடங்களில் காணப்படுகிறது.

சித்துகளின் எண்ணிக்கை வேறுபட்டாலும் பொருள் வேறுபடவில்லை. ‘சித்து‘ என்றால், ‘இயற்கை கடந்த செயல்‘ (மீஇயற்கை)  என்றே எல்லா இடங்களிலும் பொருள் படுகிறது. இயற்கைச் செயல்களுக்கு எண்ணிக்கை இல்லை. அது போலவே, இயற்கை கடந்த செயல்கட்கும் பட்டியல் வரைய இயலாது. என்றாலும், சித்துகள் அனைத்தையும் பொதுவாக எண்வகையாக்கியே கூறுகின்றனர்.

சித்தாடும் வல்லமையைப் பாம்பாட்டிச் சித்தர் பின்வருமாறு கூறக் காணலாம்.

கட்டுக் கடங்காத பாம்பைக் கையிலெடுத்து ஆட்டுவோம்.
இந்திரன் உலகத்தை இங்கே காட்டுவோம்.
தூணையும் துரும்பாகவும் துரும்பைப் பெருந்தூணாகவும்
ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் ஆக்கிக் காட்டுவோம்.
எட்டு மலைகளைப் பந்தாய் எடுத்து எறிவோம்
ஏழு கடலையும் குடித்து ஏப்பமிடுவோம்.
மண்டலத்தைக் கையால் மறைப்போம்.
வானத்தை வில்லாய் வளைப்போம்.
நெருப்புக்குள் மூழ்கி விடுவோம்
நீருக்குள் முழ்கி மூச்சை அடக்குவோம்.
பாயும் புலியைத் தாக்கி விடுவோம்.
இப்பெரிய உலகைச் செம்பொன்னாக மாற்றுவோம்.
செங்கதிரைத் தண் கதிராகச் செய்வோம்.
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்.
அறுபத்து நான்கு கலைகளையும் அறிவோம்;
அதற்கு மேல் ஒரு கலையும் அறிவோம்;
சீறும் புலி, யானை, யாளி, சிங்கம் முதலான எல்லாம்
எங்கள் சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்.
வீறுபெற்ற கடவுள்களை எங்களோடு விளையாடச் சொல்வோம்.

என்று ‘சித்தி‘ பெற்ற சித்தர் தங்களின் வல்லமையை உரைக்கக் காண்கிறோம். சித்தி என்பது, வெற்றியென்னும் பொருளில் இங்கே வழங்கப் பெறுவது அறியத்தக்கது. தங்களின் ஆற்றலையும் முயற்சியையும் கொண்டு பெற்ற வெற்றியை உரைப்பதாகக் கொண்டால் அது சாலச் சிறப்புடையதாக இருக்கும்.

சித்துகள் அறுபத்து நான்கெனவும், அதற்கும் அதிகமான சித்துகள் உண்டென்றும், அச்சித்துகளைக் கைக்கொண்டவர் வல்லமையும் மேலே காட்டப் பெற்றன. சித்துகளின் விளக்கங்கள் புராண இலக்கியங்களிலும் பக்தி இலக்கியங் களிலும் காணக் கிடைக்கின்றன.

தஞ்சை மன்னன் சரபோஜி அபிராமி பட்டரிடம் இன்று என்ன திதி என்று கேட்க அதற்கு பட்டர் பௌர்ணமி என்றார். ஆனால் அன்றைய தினம் அமாவாசை திதி என்பதை அறிந்த மன்னர் இன்று பௌர்ணமி திதியானால், நிலவைக் காட்ட முடியுமா? என, அவரும் காட்டுவதாகக் கூறி, காட்டியதாகக் கூறுவர். அதனால், இயற்றப்பெற்ற நூல் அபிராமி அந்தாதி என்பர்.

காரப்பா திகைப்பூண்டு தனைக்க ருக்கி
கருவான ஏரண்டத் தெண்ணெய் விட்டு
வீரப்பா செய்யாமல் கல்வத் தாட்ட
விபரமுள்ள மைபோல வெளிச்சங் காணும்
சேரப்பா சிமிழ்தனிலே

என்று மை செய்யும் முறையைக் கூறி அந்த மையை அமாவாசை இருட்டில், திலக மிட்டுக் கொண்டு, நாலு திக்கிலும் பார்த்தால் அழகான மதி தோன்றுவது தெரியும். அதே வேளையில் இடது கண்ணை மூடிக் கொண்டு பார்த்தால் சூரியன் தெரியும். ‘நாரான மானிடர்க்கு அப்படியே காணும்’ என்றதனால் இந்த சித்துமுறையின் மறுவடிவமே அபிராமி பட்டர் அமாவாசைத் திதியைப் பௌர்ணமி திதி என்றுரைத்ததாகக் கருதலாம்.

இறந்தவனை எழுப்புதல்

திருநாவுக்கரசர், பாம்பு தீண்டி இறந்தவரை எழுப்பியதாகக் கூறப்படும். ‘நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே’ என்ற பாடல் சான்றாக அமையும். அவ்வகைச் சித்தொன்றும் சித்தர்கள் ஆடிய சித்தில் காணப்படுகிறது.

காரப்பா அரவினுட நஞ்சுப் பித்துங்
கருவாக மத்தித்து ரவியில் வைத்து
தீரப்பா ரெண்டு பத்து நாளைக் குள்ளே
சிவசிவாஎன் சொல்வேன் கருவாய் நிற்கும்
ஆரப்பா அறிவார்கள் ஐங்கோ லத்தில்
அழுத்திமிக மத்திக்க மையாய்ப் போகும்

என்றம் மையைப் பாம்பு கடித்து இறந்தவர் கண்ணில் தீட்டி தலையில் ஒரு தட்டு தட்ட விஷம் இறங்கி எழுந்து நிற்பார் என்பதிலிருந்து, சித்துகளோடு தொடர்புடைய நிகழ்ச்சியே திருநாவுக்கரசர் செய்தது எனத் தெரிகிறது. மேலும் திருநாவுக்கரசரைக் கல்லைக் கட்டி கடலில் வீசியதும் ஒருவகைச் சித்துவினால்தான் தண்ணீரில் மூச்சடக்கியிருந்து வெளியே வந்தார் எனக் கருதலாம்.

திருவிளையாடற் புராணங் கூறும் நரிபரியானதும் பரி நரியானதும் சிவபெருமானின் திருவிளையாடலாகக் காட்டப் பெறும். அதுவும் ஒரு வகைச் சித்து எனக் கூறப்படுவதைக் காணலாம்.

வாங்காமல் நரிபரியாஞ் சித்து சொல்வேன்
வணக்கமுடன் வாங்கினதோர் தைலந் தன்னை
தீங்கில்லாப் புழுகொடு சவ்வாத சேர்ந்து
சிவசிவா மத்தித்து ரவிக்கண் ணாடி
பாங்காக பரி நரியாய்ப் பாரு பாரு
பறக்கிறதோர் குதிரையைப் போல் கண்ணில் காணும்

பாரதத்தில் சூரியனைக் கிருஷ்ணன் மறைத்ததும், இராமாயணத்தில் ஜானகி அக்கினிப் பிரவேசம் செய்ததும், அனுமன் சஞ்சீவி மலையைக் கையில் சுமந்து வருவதும் சித்தர்கள் கூறும் சித்துகளின் வடிவங்களாகும். புராணங்களின் பாத்திரங்களை உயர்த்திக் காட்ட வேண்டுமென்பதற்காகக் காட்டப்பட்ட காட்சிகளாகக் கொள்வதில் தவறுண்டாகாது.

நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை அல்லது கேட்ட, கற்ற ஒரு செய்தியைப் புராணம் படைப்போரும் இலக்கியம் படைப்போரும் தத்தம் படைப்புகளில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்திக் காட்டுவது படைப் பாளர் கொள்கைக்கு ஏற்புடையதே என்பதால், சித்தர்களின் சித்து முறைகளின் தாக்கம் புராணங்களில் இருப்பதை மறுப்பதற்கில்லை. காரணம் சிவமதம் சித்தர்கள் மூலமே உருவாகிறது என்பதை வேறொரு பகுதியில் ஆராயப் படுகிறது.

சித்தர் நெறி

சித்தர் நெறி சமயம் கடந்தது. அதே சமயத்தில் சமயத்தோடு தொடர்பு கொண்டது. என்றாலும், சமயம் வேறு, சித்த நெறிவேறு. சித்த நெறி சமயத்துள் இருக்கிறது. ஆனால், சமயநெறி சித்த நெறியில் இல்லை. சித்தர் நெறியை மதங்களோடு இணைத்துப் பேசலாம். ஆனால், மதங்களில் உயர்வு தாழ்வு காண்பது சித்தர் நெறிக்குப் பொருந்தாச் செயல்.

சித்தர்கள் தங்களுடைய இறையனுபவத்தைத் தம்மைச் சுற்றியுள்ள மக்கள் சார்ந்துள்ள மதக் கோட்டுபாடுகளின் வடிவமைப்பில் சொல்லி யிருக்கிறார்கள். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத் தங்கள் அனுபவங்களைச் சமயச் சொற்களில் சொல்லியிருக்கின்றார்கள்.

சித்தர்கள் பயன் படுத்திய சொற்களைக் காரணம் காட்டி அவர்களையும் அச்சமய எல்லைக்குள் அடக்க முற்படுவது சரியாகாது. எந்த மதத்தையும் பண்பாட்டையும் சாராமல் தனித்தியங்கும் ஆற்றலுடைய பொது நெறியே சித்த நெறி (Encyclopaedia of Americana Vol.19. p.673) என்று சித்தர் நெறியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சித்தர் நெறியும் சமய நெறியும்

சித்த நெறியையும் சமய நெறியையும் பிரித்தறியாமல் இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பதனால் இந்த நிலை ஏற்படுகிறது. ‘இறை’ என்ற ஒன்றனைப் பற்றிய சிந்தனையில் சித்தமும் மதமும் வேறு வேறு திசையில் நிற்பன. அச்சொல்லைப் பயன்படுத்துவதில் மட்டுமே ஒரே நிலையிலிருந்தாலும் ‘இறை’ எனச் சுட்டிக் காட்டுவதில் வேறு வேறானவை.

”தத்துவமும் மதமும் கலந்து உருவானது சித்தர் நெறி என்று மேலை நாட்டார் கருதுகின்றனர். ஐம்பொறிகளின் வழிவரும் புற உலக அனுபவம்,
வேறுபாடுகளும் முரண்பாடுகளும் உடையதாக இருக்கிறது. எனவே, அதனை ஒதுக்கிவிட்டு உள்ளுணர்வில் சித்தனையைச் செலுத்தி உலகியலை விலக்கி இறைவனையே எண்ணி யிருப்பவர்கள் சித்தர்கள்” என்று சமய நெறியிலிருந்து சித்தர் நெறி வேறானவை என்பது விளக்கப் பட்டுள்ளது.

சித்தர் நெறியும் உலக மதங்களும்

சித்தர்கள் மேற்கொண்ட யோகம் ஞானம் ஆகிய இரண்டுமே சமய எல்லைகட்கு உட்பட்டவை அல்ல. இவை இரண்டுமே நேர்க்கோட்டு நெறிகள். இடையில் தடைசெய்ய எவருமில்லை.

ஆலயம், உருவ வழிபாடு, சடங்குகள் முதலியவற்றால் சமயங்கள் வேறுபடுகின்றன. இவ்வேறு பாடுகள் முரண்பாடுகளாகி மக்களிடையே கசப்பையும் வெறுப்பையும் உருவாக்கிப் பூசலையும் போரையும் விளைவித்திருக்கின்றன. சமய எல்லையைக் கடந்து விட்டால் வேறுபாடுகள் இல்லாத ஒருமை நிலையைக் காணலாம். யோகமும் ஞானமும் சமய எல்லைக்கு அப்பாற் பட்ட நெறிகள். இவ்விரு நெறிகளையும் பொதுப் பெயரால் சித்தர் நெறி எனலாம். சமய எல்லையைக் கடந்து நின்று இறையின்பம் காண முயன்றவர்கள் எல்லா மதங்களிலும் நாடுகளிலும் உண்டு.

கிறித்துவத்தில் ‘மிசுடிக்குகள்’ என்றும் சீனத்தில் ‘தாவோக்கள்’ என்றும் இசுலாத்தில் ‘சூபிகள்’ என்றும் உரைக்கப்படுகின்றனர். இவர்கள் காட்டிய நெறிகளிடையே ஒரு பொதுத்தன்மை காணப்படுகிறது.

எனவே சித்தர் நெறி என்ற பொதுப்பெயரில் இவர்கள் அனைவரின் கோட்பாடுகளையும் அடக்கலாம்.

சித்தர்கள் உலகெங்கும் இருந்தனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அவர்கள் வெவ்வேறு பெயர்களை உடையவர்கள்; வேறுபட்ட இறைக் கோட்பாடும் பாரம்பரியமும் பழக்க வழக்கங் களும் உடையவர்கள்.

அவர்களின் அடிப் படையான உணர்வுகளும் செயல்களும் எல்லா நாட்டுச் சித்தர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியன வாக இருக்கின்றன.

"உலகியலை வெறுத்து ஒதுக்குவது அல்லது பெரும்பான்மையோரின் இயல்புக்கு மாறாக உலகியலை நோக்குவது என்பது இவர்களிடையே காணப்படும் பொது நோக்கு!” என்னும் கருத்தின் படி, உலக மதங்களில் குறிப்பிடப்படும் சித்தர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமைகளை ஒப்பு நோக்கிப் பொதுமைக் கருத்து கண்டறியப்பட்டது.

சித்தர்களின் குறிக்கோள்

சித்தர்கள், இந்த உலகத்திலுள்ள பொருளியல்சார் வாழ்க்கை நெறிகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள். தாங்கள் எண்ணிய ஒரு இலக்கை நோக்கிச் சென்று அதன் பயனை அறிந்து ஆனந்தம் கொள்பவர்கள்.

கால இட எல்லைக்குள் அடைபடும் இவ்வுலகையும் அதிலுள்ள பொருள்களையும் நடக்கும் நிகழ்ச்சிகளையும் அறிவதும் கட்டுப் படுத்துவதும் அதனால் மகிழ்வதும் சித்தர்களின் இறுதிக் குறிக்கோள் அல்ல. இவற்றை யெல்லாம் கடந்து மேல் செல்வதே அவர்களின் குறிக்கோள். சித்தர்கள் தங்களின் நோக்கங்களை ஒரு எல்லைக்குள்ளேயே நிறுத்திக் கொண்டு முடங்கிவிடாமல், மேலும் மேலும் கடந்து சென்று புதிய புதிய அனுபவங்களைப் பெற்று ஆனந்தம் அடைபவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டு
இதமுற்ற பாச இருளைத் துறந்து
மதமற்று எனதுயான் மாற்றிவிட்டு ஆங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே

என்னும் திருமந்திரச் செய்யுள், மூன்று புறச்சமய நெறிகள் பழுதானவை எனக் கண்டறிந்து, அவற்றின் நெறிமுறை களைக் கைவிட்டு விட்டு, பாசம் என்னும் இருளையும் விலக்கிவிட்டு, ஆணவத்தையும், யான் எனது என்னும் செருக்குகளையும் கழியவிட்டு விட்டு, இதமான வழிமுறைகளைக் கண்டறிந்து அவ்வழியைப் பின்பற்றத் தொடங்கியவர்கள் சித்தர்கள் என்கிறது.

சித்தர்களும் சமுதாயமும்

சமுதாய நெறிமுறைகள் என்னும் இலக்கண வரையறைக்கு அப்பாற் பட்டதாக இருக்கும் சித்தர்களின் நெறிகளில், சமுதாயத்தின் சீர்த்திருத்தில் சித்தநெறிக்கு என்றொரு தனித்த இடம் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. மருந்து, மந்திரம், யோகம் முதலியவற்றால் உயர்ந்த இவர்கள் மருந்து, மந்திரம் முதலியன கண்ட காரணத்தால் இவர்களைப் புதியன கண்டோர் (Inventors) எனலாம்.

சாதி, மதம், சமயம், சடங்கு முதலியனவற்றைச் சாடியவர்கள் ஆதலின் இவர்களைச் சமுதாயச் சீர்திருத்த வாதிகள் (Social Refromers) எனலாம். சித்தர்கள், சமுதாயத்திற்காகப் புதியன கண்டறியும் சீர்த்திருத்தவாதிகள் என்பதால், அவர்களையும் இச்சமுதாயத்தின் அங்கமாகவே கருதலாம். சித்தர்கள் சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து மூடநம்பிக்கைகளுக்கு இடந்தராதவர்கள். சடங்குகளையும், சடங்குகளோடு தொடர்புடைய வழிபாடுகளையும் ஏற்காத வர்கள். தங்கள் வாழ்க்கையில் கண்டறிந்த உண்மை களைத் தெளிவாக எடுத்துரைப்பதுவே இவர்களின் நோக்கம். இவர்கள் தத்துவ ஞானிகள்; மெய்ஞ்ஞானிகள்; யோகிகள்; மருத்துவர்கள் எனும் சிறப்புப் பெற்றவர்களாக இருந்துள்ளனர்.

சித்தர் ஒழுக்கம்

இயற்கை நிகழ்வான மரணத்தைத் தவிர்ப்பது சித்தர் நெறியின் நோக்கமாகும். அதனைத் தொடர்ந்து அமைந்ததே சித்தர் ஒழுக்கமுமாகும். உடல் உயிர் ஆகிய இரண்டிலும் மாசு என்னும் குற்றம் நீங்கினால் மரணம் தவிர்க்கப்படும் என நம்பினர். வாழ்வதும் சாவதும் யார் கையிலும் இல்லை. அது நம்கையில்தான் இருக்கிறது என்று அறிந்தனர். சாவதும் வாழ்வதும் நம்மால் தானே? என்று வினவியவர்கள், உடம்பின் அசுத்தம் அதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தார்கள்.

ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி

என்றவர்கள், அந்த உடம்பிலிருந்த மாசுகளை நீக்கிவிட்டு, உடலை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகளைக் கற்பமுறையால் கண்டறிந்தார்கள்.

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

அதன் பயனாக உடம்பு வளர்ந்தால், உயிரும் உடன் வளர்ந்தது எனலாம். உடம்பையும் உயிரையும் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியை மேற்கொண்டவர்கள் பலர் இருந்திருக்கக் கூடும். பலரும் பல வழிமுறைகளை மேற்கொண்டிருக்க, அந்த வழிமுறைகளைத் திருமூலர் திருத்துகின்றார்.

அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கில் அமரரும் அங்கில்லை

ஐந்து புலன் உணர்வுகளையும் அடக்கு என்பது அறிவுடைமை ஆகாது. அவ்வாறு அடக்கினால், நாம் தேடுகின்ற மூலப்பொருளாகிய பரம்பொருள் அங்கே காணப்பட மாட்டாது என்று விளக்கக் காண்கிறோம்.

அஞ்சு பஞ்ச பூத மறிந்தா லனித்தியம் போம்
அஞ்சு வசப்படுவ தாண்டனில் அஞ்சும்
கண்டறி வோர் ஞானக் காட்சி மதி நினைவு
விண்டறிய லாமே விதி

ஐந்து பூதங்களையும் அறிந்தால் மரணம் போய்விடும். அது ஓராண்டுக்குள் நிறைவேறும். ஐந்து பூதங்களையும் கண்டறி கின்றவர்கள் ஞானம் பெற்று, அறிவு தோன்றி என்றும் இருக்கும் நிலையை அடையலாம் என்று ஒழுக்க நெறிக்கு விதி படைக்கக் காண்கிறோம்.

சாகாமல் இருப்பதற்குக் கல்வி யுண்டு
சாக்காடு கொள்வதற்கு விபர முண்டு

சாகாத நிலையைப் பெறுவதற்குரிய அரிய கல்விமுறை சித்தர்களால் கண்டறியப் பட்டது. கல்வியாளன் என்பவன் மரணத்தை வெல்லும் வழிமுறைகளைக் கற்றவன் என்றே கருதப்பட்டதால், கற்றவன் மீண்டும் பிறப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் திருவள்ளுவர், ”கற்க, நிற்க அதற்குத் தக” என்றார்.

சித்தர்கள் மேற்கொண்ட ஒழுக்க முறையில், பொய்மை மொழியாது, மெய்மை வழி நடத்தல்,சூது, வாது, கபடு, தந்திரம் இவைகளை அகற்றிவிட்டு,
தீமை செய்தவர்களுக்கும் நன்மைகளைச் செய்வது, சான்றோர் களைப் பணிவது, ஆன்றோர் வகுத்த நெறியின் படி ஒழுகுவது ஆகியன சித்தர் ஒழுக்கத்தில் இடம் பெறக் காணலாம். இந்நெறிகள் அனைத்தும் குறள் கூறும் நெறிகளுள் அடங்கியிருப்பதும் கருதத் தக்கது.

சித்தர்கள் ஆத்திகரா? நாத்திகரா?

‘கடவுள் நம்பிக்கை‘ என்றொரு பொதுவான அளவு கோலைக் கொண்டு மக்களை ஆத்திகர், நாத்திகர் எனப் பிரிப்பர். சித்தர்களை எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கொள்வது? கடவுள் உண்டு என்று நம்புவதால் சித்தர்களை ஆத்திகர் எனலாம். வேதம், வேதச் சடங்குகள் அனைத்தையும் சாடுவதால் அவர்களை நாத்திகர் எனலாம்.

‘கடவுள் உண்டு‘ என்ற கொள்கையில் சித்தர்கள் வேறுபடவில்லை. வேதங்களின் நம்பிக்கையில் சிறிது வேறுபடுகின்றனர். காலத்தால் முற்பட்ட சிவ வாக்கியர், அகப் பேயார், பாம்பாட்டியார் போன்றோர் வேதத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து வேதத்தின் சிறப்பை மறுத்து நிற்கின்றனர்.

காலத்தால் பிற்பட்ட கடுவெளிச்சித்தர் ‘வேத விதிப்படி நில்லு‘ என வலியுறுத்தி வேத நெறிக்கும் சித்தர் நெறிக்கும் இடையே சமரசம் காண முயல்கின்றார். ஆத்திகம், நாத்திகம் என்னும் இரு வேறு நிலைகளும் வேதத்தை ஏற்பதையும் வேதத்தை மறுப்பதையும் அடிப்படையாகக் கொண்டது என்பதால் வைதீகச் சடங்குகள், மூடப்பழக்க வழக்கங்கள் என்பதெல்லாம் ஆத்திக நாத்திகப் பாகுபாட்டிற்குள் வரவில்லை போலும்.

அள்ளியிடவே குணமா மென்று சித்தர் வேதம் உரைப்பதுவே

மாணாய்ப் பிறப்பை யறுத்திடுவோன் வகுத்த சித்தர் நன்மொழியே

சித்தர் மாமறை கூறு மறிந்து

என்று, சித்தர்கள் வகுத்த நெறியை வேதம் என்னும் சொல்லால் சித்தர்கள் கூறியிருப்பது, "சித்தர் வேதத்தைக்" குறிப்பிடுவதாகும். அதை விடுத்து, வடமொழி நூலை வேதம் என்னும் சொல்லால் சித்தர்கள் கூறியதாகக் கொள்வதும், சித்தர்களைப் பற்றிய ஆய்வுக்குள் புகுத்துவதும் முறையன்று.

வேதம் என்னும் சொல், வடமொழி நூல்களில் மிகவும் பழமையான இருக்கு வேதத்திலும், எசுர் வேதத்திலும் புற்கட்டு என்னும் பொருளைத் தருவதாகவே அமைந்திருக்கிறது. பாரதப்போர் நிகழ்வதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன், பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிக்கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலில் ‘நான்மறை’ என்னும் சொற்றொடர் காணப் படுகிறது. வடமொழியில் வேதங்கள் தோன்றுவதற்கு முன்னரே நான்கு வேதம் என்பது தமிழில் காணக் கூடியதாக இருக்கிறது. அவை ‘மறை’ என்னும் பெயரால் வழங்கியும் வந்திருக்கிறது என்று மறைமலையடிகள்ஏ தெரிவிக்கின்றார். எனவே, வேதம் என்பதும் நான்மறை என்பதும் வேற்று மொழிக்கே உரியதாகக் கருதிக் கொண்டு, சித்தர்களுக்கும் அவற்றுக்கும் தொடர்புபடுத்திக் கூறப்படுவதும் முறையன்று.

சித்தர்களும் கடவுளும்

சித்தர்கள் கூறும் தெய்வத்துக்கும் மதங்கள் கூறும் தெய்வத்துக்கும் சொல் ஒன்றாக இருந்தாலும் வேறுபாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆலயங்களிலும் வேறு சில இடங்களிலும் காணப்படும் வடிவங்கள் தெய்வத்துக்கு உரியதா? என்றால் பதில் கிடைப்பது கடினமாகவே இருக்கிறது.

பாணி யென்ற தெய்வமதைக் கண்ட துண்டோ

என்பது முகமதியர் ஒருவரைப் பார்த்து சித்தர் கேட்கும் கேள்வியாக அமைகிறது. தெய்வம் தண்ணீர் வடிவமாக இருக்கும் எனக் கருத நேரிடுகிறது. தண்ணீர் வடிவத்தில் தெய்வத்தை யாரும் கூறியதாகத் தெரியவில்லை. மனிதன் மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்தும் உயிர்வாழ வேண்டுமானால் காற்று வேண்டும். காற்றே உயிரினங்களைக் காக்கிறது. உயிரினங்களைக் காப்பது, கடவுளாகத்தான் இருக்க வேண்டும்.

காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே

என்று, காற்றைப் பிடித்தால் மரணத்தை வெல்லலாம் என்பர். மூக்கின் வழியாக உடம்பினுள் செல்கின்ற காற்று இடது மூக்கின் வழியாக 16மாத்திரை அளவு உள்ளே இழுத்து, 64மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி, வலது மூக்கின் வழியாக 32மாத்திரை அளவாக வெளியில் செலுத்தினால் உடம்பினுள் இருக்கின்ற சிவமாகிய உயிர் வளரும். இந்த நிலையை அடைந்தவர் சித்தரும் முத்தரும் ஆவர். அவர்களுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. இந்த முறையில் பயிற்சி பெற்று மரணத்தை வெல்லும் நிலையை உணர்த்துவது திருக்கடவூரில் வீரட்டக் கோலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனின் நிலையாகும்.

மேலும், சராசரி மனிதனின் மூச்சுக் காற்று ஆறு விரற்கடை அளவு வெளியே செலுத்தினால் அறுபத்திரண்டு ஆண்டுகளும், எட்டு விரற்கடை அளவு வெளியே செலுத்தினால் ஐம்பது ஆண்டுகளும்,ஒன்பது விரற்கடை அளவு வெளியே செலுத்தினால் முப்பத்து மூன்று ஆண்டுகளும் வாழ் வார்கள்110 என்று கணிக்கப் பட்டிருப்பதனால் மூச்சுக் காற்று வெளியே செலுத்தும் அளவு கூடினால் வாழ்நாள் குறைந்தும், வெளியே செல்லும் காற்றின் அளவு குறைந்தால் வாழ்நாள் கூடும் என்று கணித்து காற்றைப் பிடிக்கும் முறை கண்டறியப்பட்டிருக்கிறது.

காற்றைப் பிடிக்கும் கலையை, மாலை வேளையில் மேற் கொண்டால் உடம்பிலுள்ள கபம் நீங்கும். நண்பகலில் மேற்கொண்டால் வாத நோய்கள் நீங்கும். வைகறையில் மேற்கொண்டால் பித்த நோய்கள் நீங்கும். இம்மூன்று வேளையிலும் தொடர்ந்து மேற்கொண்டால் நரை, திரை நீங்கி இளமை தோன்றும். காற்றின் பயனை அறிந்தே காற்றைக் கடவுள் என்றும் கூறுவர்.

நாடான நாடதனிற் கடவுள் என்று
நானிலத்தில் ஆட்டுவித்தல் காற்று காற்று
கோடான கோடி தெய்வம் காற்றுக் கேதான்
கூறிவைத்தார் அல்லாது வேறொன் றில்லை
ஆடாத ஆட்டமெல்லாம் காற்று மாகும்
அது அகன்றால் அகிலம் அழிந்து போகும்

காற்றுதான் இந்த உலகம் உய்ய காரணமாக இருக்கிறது. காற்றைத்தான் கோடான கோடி தெய்வமாகக் கூறினார்கள். காற்றைத் தவிர தெய்வம் வேறில்லை என்றும், காற்றே தெய்வமாகக் கருதப்பட்டது; இதுவே சித்தர்களுக்கும் உடன்பாடானது என்றும் கருதலாம்.

காற்றையும் நீரையும் சித்தர்கள் தெய்வமாகக் கருதினர் என்று முடிந்த முடிவாகக் கூறிவிட முடியாது. காற்றும் நீரும் இரண்டு பூதங்களாக அமைவது. பஞ்சபூதங்கள் ஐந்தும் சேர்ந்ததே உடல் என்பது சித்தர் கொள்கை. இவ்வைந்தில் ஒன்று இல்லா விட்டாலும் உயிர் உடலில் தங்காது என்று கூறப்பட்டது. அவ்வாறு இருக்க, காற்று, நீர் ஆகிய இரண்டு மட்டும் தெய்வம் என்பது சித்தர் வகுத்த மருத்துவக் கோட்பாட்டுக்கு மாறானதாக அமையும். காற்று என்றும் நீர் என்றும் கூறுவதில் ஏதோ மறைபொருள் இருப்பதாகத் தோன்றுகிறது.

சித்தர்கள் கூறும் இறைவன்

சித்தர்கள் கூறும் இறைவன் வெளியில் இல்லை; உடம்பின் உள்ளே இருக்கிறது. பிறப்பும் இறப்பும் தரும் இறைவன் வாழும் இடம் நம் தலையின் உச்சியாகும். உடம்பிலுள்ள நாதம், விந்து இறைவன் உருவமாகும்.

நமது உடம்பில் மூலாக்கினியாக வளர்ந்து எழுந்து சுழு முனை வழியாக மேலேறி தலையின் உச்சியில் சிவனெனவே நிற்கும்.

நாதத்தில் விந்துவும் நாதவிந்தில் சிவமும் சக்தியும் தோன்றும்.
சிவம் ஞானவடிவம். சக்தி செயல் வடிவம்.

சிவம் அன்றித் தனிப்பொருள் அல்லாத சத்தி, சிவத்தினிடமிருந்து தோன்றி, சிவத்திற் கலந்தே தோன்றும் என்பர்.

இறை என்பது வெளியில் இருப்பதல்ல; அது, உடம்பினுள் இருக்கும் ஒரு பொருள் எனத் தெரிகிறது.

உயிர்களுக்கு உள்ளே நிற்கும் பொருள் ஒன்றுண்டு; அப்பொருள் எல்லா உயிர்களிலும் இருக்கும், அந்தப் பொருள் ஒன்றே; அதுவே ஈசன் என்று இறைவனைக் குறிப்பிட்டுக் காட்டுவர்.

எல்லா உயிர்களிலும் இருக்கும் பொருள் ஒன்றே என்பதில், ஓர் அறிவியல் தொடர்பு புலப்படுகிறது. அதாவது, உலகில் உள்ள மனிதன், விலங்கு, தாவரம் , புழு, பூச்சி போன்றவற்றிலும் வானத்து நட்சத்திரம், சூரியன், நெபுலா போன்றவற்றிலும் இருக்கும் அணுவின் கரு ஒன்றாகவே இருக்கிறது. அதுவே அனைத்து உயிரின் மூலங்கள் என்னும் கருத்துடன் ஒப்பு நோக்கலாம்.

சித்தர்கள் கூறும் உயிரின் பொருளும் அறிவியல் கூறும் அணுவின் கருவும் ஒன்றே என்று கூற முடியாவிட்டாலும் இரண்டு கருத்துகளும் ஒன்றி இருக்கக் காணலாம்.

சித்தர்களும் உடல் தூய்மையும்

சித்தர்கள் தாங்கள் மேற்கொண்ட நெறியின் வழிச் சென்று ஞானம் என்னும் இலக்கைச் சென்றடைய மருந்துகளையே பயன்படுத்தினார்கள். நோயைத் தீர்க்கும் மருந்து; உடலைத் தூய்மைப் படுத்தும் மருந்து; ஞானத்தைப் பெற மருந்து என அனைத்துக்கும் மருந்து முறைகளையே கொண்டிருக்கின்றனர்.

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள் செய்தான்

வீர மருந்து, விண்ணோர் மருந்து, நாரி மருந்து என்னும் மூன்று வகை மருந்து சித்தர்கள் அருந்திய மருந்தாகக் கூறப்படும். இம்மூன்றும் என்ன மருந்து என்பதற்கு,

தின்று கண்டோர்க்கு இது தித்தித்த வாறே
நன்றுகண் டீர்இன் நமசிவா யப்பழம்

நமசிவாயப் பழம் என்னும் மருந்தே மேற்கண்ட மூன்று மருந்தையும் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். நமசிவாயம் என்பது எது என்பது, சித்தர்களால் பாதுகாக்கப்படுகின்ற மறைமொழியாகும். இவை முறையே வீரம் இரசம் கந்தகம் என்றும் மும்மருந்துகளைக் குறிக்கும் என்பர்.

உடல் தூய்மையானால் உடலில் ஞானாமிர்தம் என்னும் மருந்து தானாகவே சுரக்கும். அதனால் மனத்தின் இருள் நீங்கப் பெற்று மனம் சுத்தியாகும். இம்முறையை மேற்கொண்டால் முத்தி உண்டாகும். அதுவே இறைவனை அடைவதற்கான வழியாகும் என்பர்.

சிறந்துபோம் தன்னுடலே காய சுத்தி
தேறிவிடில் வென்றிடலாம் எமனார் கோழை
சுறந்துபோம் ஞானாமிர்தம் உடலந் தன்னில்
தோன்றிடுமே ஞானவொளி சோதி தானும்
இறந்துபோம் மனவிருளும் வெளிச்சங் காணும்
இல்லறத்தில் இருந்தாலும் முத்தி தானே

காயசித்தியடைந்து முத்தி நிலையைப் பெற துறவு நிலையை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையெல்லாம் இல்லை. இல்லறத்தில் இருந்து கொண்டே முத்தி நிலைக்குச் சென்றடையலாம் எனத்தெரிகிறது.

துணையுண்டு காயசித்தி எமனே சாரான்

என்றதனால் காயசித்தி அடைந்தாலே மரணத்தை வென்று விடலாம். ஆனால், மரணத்தை வெல்வதற்கும் இறைவனைக் காண்பதற்கும் பெரிய இடைவெளி யிருப்பது தெரிகிறது. இறைவனைக் காண்பதென்பது வேறு நிலையாகவும் காயசித்தி என்பது வேறு நிலையாகவும் இருக்கக் காணலாம்.


தீட்சைகள்

காய சித்தி என்னும் உடல் தூய்மையடைய பத்துவிதமான தீட்சைகள் கூறப்படுகின்றன. சுத்தி முறைகளே தீட்சை என்று கூறப்படுகிறது.

1.   மயிர்க்கால் வழியே துர்நீர்களைக் கழியச் செய்தல்
2.   வாத, பித்த, ஐய குற்றங்களை நீக்குதல்
3.   கெட்ட குருதியைக் கசியச் செய்தல்
4.   உடல் சட்டையைக் கழட்டுதல்
5.   மயிர் கறுத்தல். பஞ்சபூதம் வசமாதல்
6.   சுழுமுனை திறந்து தூர திருட்டி வசமாதல்
7.   உடல் சோதி வடிவமாகிப் பிரகாசித்தல்
8.   உடல் காற்றாக மிதத்தல், கூடுவிட்டுக் கூடு பாய்தல்
9.   எட்டு சித்திகள் அடைதல்
10. உடல் ஒளிவடிவமாதல்.

மேற்கண்ட பத்துவிதமான சுத்திகளையும் அடையச் செய்யும் மருந்துகள் மூன்று. அந்த மருந்தே வீர மருந்து, விண்ணோர் மருந்து, நாரிமருந்து என்னும் கற்பங்களாகும். அவை முறையே கற்பம், யோக கற்பம், ஞான கற்பம் என்பனவாகும்.

ஞான கற்பம்

சித்தர்கள் யோக முறையில் சாகா நிலையை அடைய மனவழி பயிலும் யோக முத்திரைகள் ஞான கற்பம் எனப்படும்.

ஞான முத்தி பெறும் நிலை சாகாநிலையைத்தரும். ஞானம் என்பது அறிவு, முத்தி என்பது முதிர்வைக் குறிக்கும். அறிவின் முதிர்வே ஞானமுத்தியாகும். இந்நிலையை அடைய பன்னிரண்டு ஆண்டுகள் யோக முறையில் ஞானகற்பம் என்னும் முத்திரைப் பயிற்சியை மேற் கொள்ள வேண்டும். இம்முறைகள் வழிவழியாக அறிப்படுவன. இவை மறை மொழி என்னும் குறியீட்டு முறையால் உரைக்கப்படும். ஞான கற்பம் இரண்டு வகை. ஒன்று வாலைபூசை, மற்றொன்று கற்பம். இரண்டும் சேர்ந்தது ஞானகற்பம். பூசை என்பது புசித்தல், உண்ணல் எனப் பொருள்தரும். வாலை என்பது, மூலாதாரத்துக்கும் தலையின் உச்சிக்கும் உள்ள வாயுத் தொடர்பு.

கற்பங்களின் வகை

ஞான கற்பம் நான்கு வகைப்படும். அவை, அகரம், உகரம், மகரம், சிகரம் என்பன.

கற்பம் உண்ணும் காலம்

யோக முறையில் உண்ணப்படும் நால்வகைக் கற்பங்களை காலை மாலை ஆகிய இரண்டு வேளை உண்ண வேண்டும்.

கற்பம் தோன்றுமிடம்

கற்பம் இருக்குமிடம் அல்லது அறியுமிடத்தைக் கற்ப நேர்மை என்பர். உடல் அடி, நடு, முடி என்னும் மூன்று இடங்களைப் பெற்றிருக்கும். அடி என்பது மூலாதாரம், முடி என்பது தலையின் உச்சி, நடு என்பது இரண்டு புருவத்துக்கும் நடுவிடமாகிய மூக்கின் அடிப்பகுதி. இந்த நடுவிடமே கற்பம் அறியுமிடம் என்று கூறப்படும். இவ்விடமே கற்ப நேர்மையாகும்.

இந்தக் கற்பங்களை உண்டவர்கள் சித்தர்கள் எனப் படுவர். இந்த நிலையை அடைந்தவர்கள் சிவநிலையை அடைந்ததாகவும் கூறுவர். ‘சிவனும் நானும் ஒன்றானோம்’ என்று திருமூலர் கூறுவார். சிவன் என்பதும் சித்தநிலை அல்லது சித்தரைக் குறிக்கும். இம்முறையைப் பன்னிரண்டு ஆண்டுகள் இடை விடாமல் தொடர்ந்து செய்யவேண்டும். இப்பயிற்சியின் போது ஏற்படுகின்ற உடல் மாற்றம், மனமாற்றம், துன்பங்கள், மருந்து, உணவு முறை போன்ற பல தகவல் களுடன், ஒவ்வொறு மாதமும் என்னென்ன நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை ஒரு அனுபவத்தின் அறிக்கை யாகக் கருதலாம்.

கற்பம் உண்ணும் போது ஏற்படும் விளைவுகள்

முதல் மாதம் : மேல் கால்கள் வலிக்கும்; 2ம் மாதம்: சூடுண்டாகும். மலங்கழியும். பேதியாகும்;

3ம் மாதம்: வாய்வேகும். அபானம் வரை சூடுண்டாகும்.; 4ம் மாதம் : கால், கை நோகும்;

5ம் மாதம் : வயிறு புண்ணாகும். ஆசனம் வேகும். பெண் மாய்கை அதிகமாகும். சிறுநீர் கடுத்து விழும். விந்து விழும். நினைவு மாறும் இடங்கள் வெந்து போகும். வெயில் படாதிருக்க வேண்டும் ;

6ம் மாதம் : பசியுண்டாகும். புளியேப்பம் மிகும். உடல் நோகும். நடைகள் ஓயும். காரசாரம் சேர்க்கவும். புளியும் கொள்க;

7ம் மாதம் : திமிரேரும். அசதி கொள்ளும். உடல் வெளுக்கும். புளியேப்பம் மிகும். பெண்ணாசை ஏற்படும். சிறுவாசல் வயிறு நோகும்;

8ம் மாதம் : உடலில் ஒளியுண்டாகும். எலும்பிலுள்ள மூளை போகும். எலும்பின் வழி சுவாசம் போகும். புளியதனைக் கொள்ளவேண்டும். குய்யம் வேகும். தொடை விருவிருக்கும்;

9ம் மாதம் : வயிறு நோகும். குண்டலியின் முறப்பதாகும். உடல் மினுமினுக்கும். அசதி காணும். தங்கம் போல் உடலிருக்கும். பசும் பால் அருந்துக;

10ம் மாதம் : ஆகாரம் வேண்டாதாகும். உண்பது பாலாக பேதியாகும். பொருமல் அசதி காணும் மனம் புத்தி அகங்காரம் ஒடுங்கும். உடல் அதிக சூடுண்டாகும். உடலில் நெய் போல அருகும்;

11ம் மாதம் : மண்டையிடிக்கும். புளியதனை உண்டால் கூத்தன் அணுக மாட்டான். திருவாகத் தனஞ்செயனும் எழுந் திருப்பான் சிறப்பாக பரைபூசை விடாமற் செய்க;

12ம் மாதம் : மகத்தான சந்து வலிவரும். சீதம் விழும். கை கால் அசதி. பூரணத்தைக் கைக் கொண்டால் வெகு சுளுவாய் வியாதி பறக்கும். பின்பு ஆதவன் போல் உடலிருக்கம். இன்னும் பல ஆச்சரியங்கள் உண்டாகும்;

1ம் ஆண்டு : புளியுண்ண வேறு எதிலும் மனது முடிய நாடா. எமன் ஓடிப் போவான். அருணன் போல் எந்நாளும் இருக்கலாம். அவரைச் சித்தரெனச் சொல்வார்கள்;

2ம் ஆண்டு : சூட்சாதி சூட்சமெல்லாம் தெரிந்து முடிய கொள்ளலாம். எமனை வெல்லலாம். ஞானியாகலாம். மெய்ஞ்ஞானி யென்னும் பெயருண்டாகும். கல்லாக உடல் இருகும். எலும்புகளில் வாசி ஏறும்; நரம்பு வலுக்கும். வாலை பேசும்;

3ம் ஆண்டு : புகழுண்டாகும். பிணம் போல் முடிய வாழ்வான். குற்றமில்லா திருப்பான். ஒருவரோடும் தூஷணமாக ஒரு நாளும் பேசான். சிறப்பில்லா செயலை எண்ணான். அருமையொடு வாய்திறந்து பேசான்;

4ம் ஆண்டு : தினமும் யோக நிலையிலிருப்பான்; முடிய அய்யம் நீங்கும் உடல் நோகும்; வெய்யலில் போகான்;

5ம் ஆண்டு : உண்மையுடன் நடந்து கொள்வான். முடிய உயர்வான காரியத்தைச் செய்து பார்ப்பான். வகார முதல் எல்லாஞ் செய்வான். தனித்திருப்பான். நரைதிரை அற்றுப் போகும். மலைவாசியாவான். கண்ணுக்குத் தோணமாட்டான்;

6ம் ஆண்டு : மலசலம் பேதிக்கும். கெவுனத்திற்கு முடிய உறுதியாகும் அமுதமது பெருகிக் காணும். தினமும் அமுதம் உண்டு, பூரணத்தைப் பணிய உலகமெங்கும் புகழ் கொண்ட சித்தனாவான்;

7ம் ஆண்டு : சிறுபிள்ளை போன்றும் மதளை முடிய போன்றுமிருப்பார்;

8ம் ஆண்டு : தனியாகக் குகையிலிருப்பான். முடிய ஆசைகள் அறும் அமுதத்துடன் பால் விட்டுண்பான். சீவனுக்குச் சீவனாக இருப்பான்;

9ம் ஆண்டு : ஒருவரையும் சட்டை செய்யான். முடிய ஒடுங்கிப் போவான். வாய்மை தவறமாட்டான். விரும்பியொரு காரியத்தைச் செய்யான். காதவழி நடப்பான். வாசி வசமாகும்;

10ம் ஆண்டு : அமுரி பழுக்கும். உடல் சட்டை முடிய வாங்கும். உடல் பொன்போலாகும். தேக உப்பு மாறிப் போகும்;

11ம் ஆண்டு : வாய்ச்சொல் பலிக்கும். அறுசுவை முடிய வேண்டாதாகும். உயர்ஞான கேசரங்கள் தெரிவான். யாவரையும் சரிசமமாய் நினைப்பான். உற்றாரோடு வாஞ்சை நீக்கி உம்பர்களோடு இணங்கி வாழ்வான்.;

12ம் ஆண்டு : எப்பொழுதும் அழியாத தேகமாகும். முடிய உடலெங்கும் சவ்வாது மணம் பொருந்தியிருக்கும். நரை மயிர் கருத்துப் போகும். குழந்தைபோல் வயது பதினாறுமாகும். மண மாப்பிளை போலழகுண்டாகும்.
இவ்வாறு பன்னிரண்டாண்டு கற்பமுண்ட வாழ்வு முடிந்தால், ஒரு வயது என்று கணக்கிடப்படும். இருபத்து நான்காண்டு நிறைவடைந்தால், இரண்டு வயதென்று கணக்கிடப்படும். பன்னிரண்டு ஆண்டை ஒரு வயதென்று எண்ணிக் கொள்க. நூறு வயதாகும் போது கூடுவிட்டுக் கூடு பாய்வான். மூன்று உலகமும் போய்வருவான். அஷ்டகர்மத் தொழில் களையும், அறுபத்து நான்கு சித்துகளுக்கும் அவனே ஆவான். புகழான பேருபெற்று வாழ்வான்.

பத்தியம் :

கற்பம் உண்ணுங்காலங்களில், பசுவின் பால் பாசிப்பயிறு சோறு இரண்டும் சிற்றுணவு. மாமிசம், மீன், கடுகு, நல்லெண்ணெய் ஆகா. முழுகுதற்குத் தேங்காய் சேர்க்கவும். இப்பத்தியம் கடுமையாகக் காக்க வேண்டும்.

கற்பம் உண்ண வயது : 

இருபது வயதுக்கு மேல் நன்று. முப்பதுக்குள் மிகவும் நன்று. நாற் பத்துக்குள் உண்டால் பலிக்கும். ஐம்பதுக்குள் இன்னல் வராது. அறுபத்துக்குள் என்றால் உடல் பொன்னாகும். எழுபதுக்குமேல் பலிதமிராது.

காய சித்தியும் மூலப்புளியும்

சித்தர்களின் ஞானக் கோட்பாட்டின் படி காயம் சித்தியானால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம். காயம் சித்தி பெற கற்பம் வேண்டும். காய சித்திக்குக் கற்பமாக அமைவது மூலப்புளி.

மூலப்புளி என்பது என்னவென்று அறிந்து கொண்டு அதை முறைப்படுத்தி உண்டுவந்தால் எந்த நோயும் குணமாகும். எந்த நோயாலும் உடல் பாதிக்காது என்பர். மூலப்புளி என்பதே சித்தர் நெறியின்மூலப் பொருள். அதைக் கண்டு கொண்டால் எல்லாரும் சித்த நிலையை அடையலாம். இதுவே, சித்தர்கள் மேற்கொண்ட மறை பொருளின் இறுதி நிலையாகத் தோன்றும்

பறந்து போம் மூலப்புளி தின்றா யானால்
பசிக்கையிலே அன்னமுண்டு பசிதீர்ந்தாப் போலே
சிறந்து போம் தன்னுடலே காய சித்தி

பசித்த போது உணவை உண்டால் பசி தீர்ந்து போவதைப் போல மூலப் புளியைப் புசித்தவுடன் உடலிலுள்ள குற்ற மெல்லாம் நீங்கி காயம் சித்தியாகும்.

பத்தி யொடு மூலப்புளி உண்ட பேர்க்குப்
பரிவாகத் தேகமெங்கும் பொன்னதாகும்

இருப்பார்கள் மூலப்புளி உண்ட பேர்கள்
இயல்பாக ஒருவருக்கும் தெரியா தையா

மூலப்புளியை உண்டவர்கள் உடல் பொன்னிறமாக மாற்ற மடையும். அவ்வாறு உண்டவர்கள் இயல்பாகவே எல்லாரையும் போலவே இருப்பார்கள். அவர்களின் நடவடிக்கையில் ஒரு மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது.

மூலப்புளியின் இருப்பிடம்

மூலப்புளியை உண்பதால் காய சித்தி உண்டாகும். மரணமில்லை. உடல் பொன்னிறமாகத் தோன்றும் என்று கூறியவர்கள், மூலப்புளியின் இருப்பிடத்தை உரைக்கின்றார்கள்.

கற்பம் இருப்பதும் உந்தனுள்ளேகலை
நாலும் இருப்பதும் உந்தனுள்ளே

மாயாத கற்பமது உன்னுக்குள்தான்
வளர்ந்திருக்கு தென்றறியார் மடையர் தாமும்

என்றும் உரைப்பதிலிருந்து மூலப்புளி என்னும் கற்பம் உடலிலேயே வளர்ந்து இருப்பது தெரியவரும்.

கற்பம் இருப்பதும் உந்தனுள்ளேகலை
நாலும் இருப்பதும் உந்தனுள்ளே

மாயாத கற்பமது உன்னுக்குள்தான்
வளர்ந்திருக்கு தென்றறியார் மடையர் தாமும்
மூலப்புளிதனைப் பன்றிநாய் தின்றது

என்று, மூலப்புளி என்ன வென்று கூறாமல் குறிப்பினால் உரைக்கப்பட்டது. பன்றியும் நாயும் தின்றது என்றால் அது, மனிதக் கழிவுப் பொருள் என்றே கருத நேரிடுகிறது. மனிதக் கழிவு கற்பப் பொருளா? என்ற ஐயம் மேலிடுகிறது. என்றாலும், பன்றி நாய் என்பதும் மறைபொருள் சொல்லாக இருந்து விட்டால், எவ்வாறு கண்டறிவது?

ஆவதுவும் ஆதிபுளி உப்பி னாலே
அழிவதுவும் சுகபோகத் தாசை யாலே

ஆக்கத்திற்கு உரிய பொருளாக ஆதி உப்பும் ஆதிப்புளியும் பயன்படுவதாகக் கூறப்பட்டது. அவை, சுகபோகத்தினால் அழியக் கூடியது என்றும் தெரிவதால், பன்றியும் நாயும் தின்றது என்பதன் பொருள் வேறாக இருக்கிறது. ‘சிந்தையை உள்ளடக்கிச் சுழுமுனை தன்னை நோக்கித் தியானித்தால் ‘ஆகாய கற்பம்’ தானே கிடைக்கும். இந்த ஆகாய கற்பத்தை நாளும் உண்டு வந்தால் ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ கொள்ளலாம். யோக முறையை விரைவாகப் பெற ‘மாமூலி மருந்தை‘ உட்கொள்ள வேண்டும். ‘ஆதி கரு நெல்லி’யைக் கொண்டு வந்து குற்றங்களைப் போக்கித் தினமும் இருவேளை உண்டு வந்தால் யோகத்தின் ‘ஆறு நிலை‘களும் தானாகத் தோன்றிவிடும். ‘வான மழை‘ பொழியத் தொடங்கும். அம்மழை நீரே ஆகாய கற்பமாகும். (பாணியென்ற தெய்வமதைக் கண்டதுண்டோ என்றது இதைத்தான் போலும்.)  இம்முறையில் மூலப்புளியை அருந்த முனைந்தார்க்கு அனைத்து சுகமும் கிடைக்கப் பெறும் என வரும் திருவள்ளுவரின் கருத்தின்படி மாமூலி ஆதிகருநெல்லி மூலப்புளி என்பவை ஒரே பொருளை உரைக்கும் வெவ்வேறு பெயர்களாகக் கருதலாம்.

பாதாள மூலியடி பாடாணம் தான் சேர்ந்து
வேதாளம் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான் மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா
தனலாக வேகுறண்டி

என்று அழுகணிச் சித்தர் குறிப்பிடுவார். பாதாளமூலி பூநீர்; பாடாணம்; பிரம்மராச்சசி என்னும் வேதாளம் ரயில் கற்றாழை; வெண்டாரை இரசம்; நெய்சிறுநீர் இவை சேர்த்து செய்த செந்தூரம் உண்டால் காயசித்தி உண்டாகும் என்பது பொருள். இப்பாடலில் வரும் பாதாள மூலிபூநீரைக் குறிப்பதாக இருப்பதால் மூலப்புளி என்பது பூநீரைக் குறிக்கும் சொல் எனலாம்.

சிவந்திருக்கும் மூலிகைதான் செடிதானல்ல
வீட்டிலே யிருக்குமடா அந்த மூலி
விளையுமடா காயோடே விரையில்லாதே
நில்லாத நிழல் சேர்ந்த தண்ணி ரோரம்
நிழலருகே முளைத்திருக்கும் மூன்று மூலி
கோவானூர் பொட்டலிலே
குண்டுமேனி அம்மன் கோயிலிலே
சாகா மூலி முளைத்திருக்கு ஞானப் பெண்ணே

என்று கற்பப் பொருள் மறைபொருளாகக் கூறப்பட்டுள்ளது. என்றாலும் இது, மரணத்தை வெல்லக் கூடிய பொருள் என்பதால் சிறப்புக் கவனத்துடன் ஆராய்ந்தால் பயன் தரும். நில்லாத நிழலருகே முளைத்திருக்கும் மூன்று மூலி என்று குறிப்பால் உரைக்கப் பட்டிருக்கும் கற்பப் பொருள் அகரம் உகரம் மகரம் ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்ததே. அது ஓம் என்னும் பிரணவப் பொருளாகும்.

பாரடா சிவமூலி சகஸ்திரட் தெட்டின்
பாலிருக்கும் நாற்சரக்கைக் காணமாட்டார்

என்று கற்பப் பொருளில் நான்கு பொருள்கள் கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்நான்காவது, கெந்தகம், பாதரசம், உப்பு, நஞ்சு என்பன. இந்நான்கில் கலந்துள்ள நஞ்சை நீக்கிச் சுத்தி செய்து முறைப்படி உண்பது கற்பமாகும். இதுவே உயிரின் மூலப்பொருள் எனச் சித்தர் வேதம் உரைக்கின்ற பிரணவம் ஆகும். இந்த பிரணவக் கற்பம் ஆற்றல்மிக்கது. எல்லாவகை நோயையும் போக்கக் கூடியது. நரை, திரை, மூப்பு என்னும் மூன்றையும் போக்கி உடலைக் காப்பது என்பர்.

விண்கொள்ளாச் சுண்ணத்தை யென்ன சொல்வேன்
வியாதி யென்றால் கடுகளவு கொடுத்துப் பாரு
எள்ளளவு நாவுமேல் இட்டுப் பாரு
தாகமென்ற பசிபோச்சு தன்மை யாச்சே
பேச்சேது கற்பமுண்டால் திரேகந் தானும்
பிலத்ததடா நரைதிரையும் ஓடிப் போகும்

என்று கற்பத்தின் சிறப்பு உரைக்கப்பட்டது. வியாதி என்றால் கடுகளவு கொடுத்துப் பாரு என்று கூறப்படுவதிலிருந்து இந்த கற்பத்தின் சிறப்பு என்ன வென்று உணர முடியும்.

சித்தர்கள், தாங்கள் உண்டு வந்த கற்பப் பொருளில் கெந்தகம், பாதரசம், உப்பு என்னும் மூன்றுபொருள்களை மூலப்பொருளாகக் கொண்டு பிரணவக் கற்பத்தைத் தயாரித்திருக்கின்றார்கள் எனத் தெரிய வருவதால், இம்மூன்றையும் இணைத்தால் வேதியல் முறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தால், சித்தர்கள் பெற்ற பயன்கள் மனிதர்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ததாக இருக்கும்.

சித்தர் நூல்களில் குறியீட்டு முறைகள்

சித்தர் நூல்களில் சில சொற்கள் ‘கலைச் சொற்கள்’ போலக் காணப்படுகின்றன. அச்சொற்கள், சித்தர்கள் கூறக் கருதிய பொருளைக் குறிக்கும் மூலக் குறியீடுகள் எனலாம்.

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தின் தொகைச் சொல்லாகப் ‘பஞ்சபூதம்’ கூறப்படுகிறது. அவை ‘நமசிவாய’ என்னும் குறியீட்டினாலும் குறிப்பிடப்படுகிறது.

ந :மண்;
ம: நீர்

எனக் கொள்வர்.

மண்+ நீர் சேர்ந்தால், மண்ணில் நீர் கலந்தால், உயிர் உண்டாகும் என்பதை
‘நம’ என்றும் ‘நமோ’ என்றும் குறிப்பிடப்படும்.

அனைத்துப் பொருள்களிலும் மண், நீர் குணம் இருக்கிறது. இதனை நாதம், விந்து என்பர். வலப்புற நாசி வழியே இயங்கும் மூச்சுக் காற்று ஆண் அல்லது விந்து என்றும், இடப்புற நாசி வழியே இயங்கும் மூச்சுக் காற்று பெண் அல்லது நாதம் என்றும் இரண்டு நாசிகளிலும் இயங்கும் மூச்சுக் காற்று உயிர் என்றும் கரு என்றும் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு குறிப்பிடப்படுகின்ற மூலக்குறியீடுகள், தோற்றம், பிறப்பு, யோகம், ஞானம், முத்தி போன்ற பொருள் களை விளக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் உட்பொருள்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன. அவை வருமாறு:

இணையாக வரும் சொற்கள்:

1.   ஆண் பெண்
2.   விந்து நாதம்
3.   காரம் சாரம்
4.   உப்பு புளி
5.   நட்பு பகை
6.   சத்துரு மித்துரு
7.   சூரியன் சந்திரன்
8.   வலது இடது
9.   எட்டு இரண்டு
10.  அகரம் உகரம்
11.  சூரியகலை சந்திரகலை
12.  வலக்கண்  இடக்கண்

கலைச் சொற்களாகக் குறிப்பிடப்படும் ஒற்றைச் சொற்கள்: 1.பஞ்சபூதம் 2.நமசிவாய 3.ஓம் 4.பிரணவம் 5.ஐம்பத்தொன்று 6.கைலாயம் 8.சாகாக்கால் 9.போகாப்புனல் 10.வேகாத்தலை 11.ஆகாயகங்கை 12.அமுதம் 13.வானமுதம் 14.முப்பூ போன்றவை குறிப்பிடத் தக்கவை.

மருந்துகளில் ஆண் பெண் குறியீடு

உயிரினங்களில் ஆண் பெண் குறியீடு இருப்பதைப் போல, மருந்துகளிலும் அக்குறியீடுகள் காணப்படுகின்றன. அக்குறியீட்டு முறை மருந்துகளின் சேர்க்கைக்குப் பயனுடையதாகத் தெரிகிறது.

ஆண் பெண் சேர்க்கையால் மற்றொரு உயிர் உருவாவதைப் போல ஆண் பெண் மருந்துகளின் சேர்க்கை யினால் மற்றொரு மருந்து உருவாவதாக உரைக்கப் படுகிறது. இவ்வாறான சேர்க்கைகள் மருந்து, வாதம், யோகம் ஆகிய முறைகளிலும் காணப்படுகிறது. ஆண் பெண் மருந்துகள் வருமாறு:

ஆண் மருந்து பெண் மருந்து

தங்கம், இரும்பு, வீரம், சூதம், மனோசிலை, செம்பு, லிங்கம்,
காந்தம், கல்லுப்பு, வெடியுப்பு, கெந்தி, நிமிளை, இந்துப்பு,
சூடன், அப்பிரகம், கௌரி, படிகாரம், துரிசு, வெங்காரம்,
பேதி, சிலாசித்து, கற்பூரம். நாகம், பொன்னம்பர்,
கல்மரம், காடி.

சாகாக்கால், வேகாத்தலை, போகாப்புனல்

சாகாத கால், வேகாத தலை, போகாத புனல் என்னும் மூன்றும் குறியீட்டுச் சொற்களாகும். இம்மூன்றும் வைத்தியம், வாதம், ஞானம் ஆகிய மூவிடங்களிலும் இடம் பெறும்.

நவிலுவேன் சாகாக்கால் சூத மென்பார்

நவிலுவேன் நான்போகாப் புனலைக் கேளு
காந்தமது அப்பினிலே தாழ்த்தி டாமல்
அவிலுவேன் மிதந்து சென்றால் வாய்ப்பாச் சப்பா
அக்கினியில் புகையாத கெந்தி வாய்த்தால்
நவிலுவாய் நீ வேகாத் தலையென் றப்பா

என்றதனால், சாகாக்கால், இரசம். இரசத்தை முறைப்படி மணியாகக் கட்டுதல், வேகாத்தலை, கெந்தகம். நெருப்பில் புகையாமல் கட்டுதல்,
போகப்புனல், காந்தம். தண்ணீரில் மூழ்காமல் மிதத்தல் எனக் கொள்ளப்படும். ஆனால் இவை மருத்துவத்துக்கு மட்டுமே பொருளாகும்.

சாகாத காலதுவே அறுகோ ணந்தான்
தனிவேகாத் தலையதுவே மூலமாகும்
போகாத புனலதுவே புரவெளி தானப்பா

என்றதனால், முறையே அறுகோணம், மூலம், புரவெளி என்னும் மூன்று இடங்களைச் சுட்டுவதாக அமையும். இவை யோகத்துக்குரிய இடங்களாகக் கொள்ளலாம். யோகத்தில், அடி, நடு, முடி என்னும் மூன்று இடங்களாக மூலாதாரம், சுழுமுனை, புரவெளி என்னும் உச்சி ஆகியவை இம்மூன்றின் இடங்களாகக் கருதுவர்.

மேற்கண்ட இம்மூன்றின் இடங்களும் ஞானத்திற்குரிய இடங்களாகத் திரு அருட்பா (சற்குணமணி மாலை. பா.7), அகத்தியர் கற்ப சூத்திரம் (பா.10), சட்டமுனி வாத காவியம் (பா.23), யாகேபு சூத்திரச் சுருக்கம் (பா. 144), அகத்தியர் பரிபாஷை (பா. 21), அகத்தியர் ஞானம்12 (பா. 12) எனப்பல நூல்களில் இடம் பெறுகின்றன. சித்தர்நூல்களில் பெரும் புதிராக விளங்கும் இம்மூன்றும் மறைமொழிச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும், இவை சூதம், கெந்தகம், காந்தம் என்னும் மருந்துப் பொருள்களையும் அடி நடு முடி என்னும் மூலாதாரம், சுழுமுனை, உச்சி ஆகிய யோக நிலைகளையும் அகரம் உகரம் மகரம் என்னும் மந்திரங்களையும் உரைப்பவை என அறியப்படுகிறது.

ஐம்பத்தோர் எழுத்து

சித்தர் இலக்கியங்கள், ஐம்பத்தோர் எழுத்துகளைப் பற்றிக் குறிப்பிடக் காணலாம். திரு அருட்பா அனுபவ மாலை18, திருமந்திரம்11 இடங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. சித்தர்களின் குழூஉக்குறி குறிகளில் இதுவும் ஒன்று.

அம்பத் தொன்றில் அக்கரம் அடக்கம்

இந்த ஐம்பத்தோர் எழுத்தில் அகரமும் அடக்கம் எனச் சிவவாக்கியரும்,

அம்பத்தோர் அட்சரம் அறியநீ சொல்லடி சிங்கிஅது
வஞ்ச மகர நடுச்சுழி மூன்றுமே சிங்கா

இந்த எழுத்துகள் அகரம் உகரம் மகரம் என்னும் அடி நடு முடி என்னும் மூன்றுமே என்று ஞான ரத்ன குறவஞ்சியும்,

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய்
ஐம்பத்தோர் அச்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்

நமசிவாய என ஐந்தெழுத்தாய், நமசிவய+அ உ ம என எட்டெழுத்தாய், ஐம்பத்தோர் எண்களாய் இருப்பது இந்த உடலில் உள்ள உயிர். அதனைப் போற்றி வேண்டுங்கள் என்று பட்டினத்தாரும் கூறக் காணலாம்.

ஐம்பத்தோர் எழுத்து என்பது எழுத்தா, எண்ணா என்பது சித்தர் இலக்கியத்தை ஊன்றிப் படித்தால்தான் விளங்கும்.

யோக முறையைப் பயிலும் போது மூச்சுக் காற்றைப் பயிற்றுவிக்க வேண்டும். இதனைப் பிரணாயாமம் எனக் கூறுவர். பத்து வகை வாயுக்களில் பிராணன் என்னும் மூச்சுக் காற்று வெளியே போகாதவாறு கட்டுவதே (சாகாக்கால்) பிராணாயாமமாகும்.

உடம்பின் உள்ளே சுழலும் பிராண வாயு வெப்பமடையும். பாம்பு வடிவில் மூலாதாரத்தில் இருக்கும் குண்டலி, வெப்பத்தினால் (வேகாத்தலை) மேலெழுந்து முதுகுத் தண்டின் வழியாகச் செல்லும். அப்போது உடம்பிலுள்ள ஆறு ஆதாரங்களில் குண்டலி பொருந்தும் போது ஏற்படும் அதிர்வுகளை ஒலியாகக் கொண்டு, இந்த ஒலி அதிர்வுகளை ஐம்பத்தொன்று என்பர்.

ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவற்றில் முறையே 4, 6, 10, 12, 16, 3 என 51 ஒலி அதிர்வுகளைக் குறிப்பிடுவர். இந்த ஐம்பத்தொரு ஒலி அதிர்வையும் கேட்டு கடந்த பின்பு கம்பலம் என்னும் அருள்வெளி தோன்றும். இதனை மகாமேரு என்று குறிப்பிடுவர். அந்த இடத்தைச் சகஸ்ர தளம் என்றும் கூறுவர். அந்த இடத்திலுள்ள பிந்துவோடு குண்டலி இணையும். அதனையே சிவசக்தி ஐக்கியம் என்பர். ( (ஆண்+பெண்=சேர்க்கை; நாதம்+விந்து=கலப்பு எனல்)

நாத விந்துக லாதீ நமோநம

என அருணகிரி நாதர் உரைக்கக் காணலாம்.

இவ்வாறு நாதமும் விந்தும் கலக்கும் போது உருவாகும் ஊற்றை வானாறு, அமிர்தம், மாங்காய்பால், சந்திர அமிர்தம், ஆகாய கங்கை என்று குறிப்பிடுவர். எனவே, ஐம்பத்தொரு எழுத்தென்பது சாதாரண எழுத்துகளோடு தொடர்புடையதல்ல.

ஆதாரங்களில் எழுகின்ற ஒலி வடிவமே எழுத்து எனக் குறிப்பிடப்படுகிறது. இது, யோகத்துடன் தொடர்புடையதென்று கூறப்படுகிறது.

இவ்வாறு யோக முறையினால் சுரக்கப் பெறும் நீரை உண்டால் மரணம் தவிர்க்கப்படும் என்பதுசித்தர் கொள்கை. இதுவே சித்தர் நெறியின் இலக்குமாகும். இந்த நிலையை அடையும் வழிகளைக் கூறுவதே சித்தர் இலக்கியப் பொருளாகும். இதன் உண்மைகளை அறிவியலாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பீனியல் சுரப்பு (Pineal Gland)

பீனியல் சுரப்பி என்பது மனித மூளையின் மேல்பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயக்கத்தை யோகத்தின் மூலமாகச் செயல்பட வைப்பதே சித்த முறையாகும். பீனியல் சுரப்பு 14 வயது வரை வளர்ச்சியடைந்து பின்னர் அதன் வளர்ச்சிக் குன்றிவிடும்.

பீனியல் சுரப்பி மூலம் சுரக்கும் ஹார்மோன், ‘மெலடோனின்’ எனப்படும். மெலடோனின் எனப்படும் ஹார்மோன் மனித ஆயுளை நீட்டிக்கவும் பாதுகாக்கவும் வல்லது என்பர். இதன் சுரப்பை நீட்டிக்க வாசியோகம், குண்டலி யோகம் பயன்படுகிறது.

இச் சுரப்பு குறைந்தால் ஆயுளும் குறையும். மெலடோனின் சுரப்பை அதிகரிக்க யோகம், கற்பம் போன்றவை பயன்படுகின்றன. ஆணின் உயிர்ச்சத்தான விந்தையும், பெண்ணின் உயிர்ச் சத்தான சுரோணிதத்தைம் அடக்கினால் இச்சுரப்பியின் ஊற்று அதிகரிக்கும்.

மெலடோனின் சுரப்பின் இயக்கத்தை நீட்டிக்க வேண்டுமானால் அச்சுரப்பியின் மேல் ஒளி விழச் செய்யவேண்டும். அதற்கு குண்டலி மூலம் மூலக்கனல் என்னும் ஒளியை எழுப்பி முதுகுத் தண்டின் வழியே தலையின் உச்சிக்கு ஒளியைக் கொண்டு செல்வதே யோகமுறை.

”இதற்குத் திபேத்திய லாமாக்கள், புருவமத்தியில் ஓட்டையிட்டுக் கொள்வதாகவும் இதன் மூலம் வெளியிலிருந்து ஒளி உள்ளே ஊடுருவிச் சென்று மெலடோனின் சுரப்பியைச் சுரக்கச் செய்வதாகவும் நம்புகின்றனர்” என்பதால், சித்தர் செயல்களில் பொதிந்துள்ள அறிவியல் உண்மைகள் விளங்கும். அறிவியல் தொடர்பு இல்லாத காலங்களிலேயே அறிவியலோடு தொடர்புடைய செயல்களைச் செய்து, மரணத்தை வெல்லும் முறைகளைக் கற்றறிந்த சித்தர்கள் அறிவியல் முன்னோடிகள் எனலாம்.

மந்திரமும் எழுத்தும்

மந்திரம் என்பது மறைமொழிகளால் மனிதர், விலங்கு, பறப்பன, ஊர்வன, தாவரங்கள், நஞ்சுப் பொருள்கள் ஆகியவற்றைத் தமக்குப் பயன்படுமாறு இயக்குவது என்பர்.

மந்திரம் எண் வடிவமாகவும் எழுத்து வடிவமாகவும் குறிப்பிடப் படுகிறது. மந்திர எழுத்து என்பது ந, ம, சி, வா ய என்னும் ஐந்து எழுத்து. எண் என்பது அந்த எழுத்துகளுக்குரிய எண்களாக 9, 11, 4, 15, 12 எனக் குறிக்கப்படும்.

அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன

காட்டில் உள்ள யானைகளை அடக்குவதற்கு அங்குசம் பயன்படுவது போல், ஐந்து பஞ்சபூதங்களால் உருவான உயிர்கள் அனைத்தையும் அடக்குவதற்கு அங்குசமாக மந்திர எழுத்துகள் பயன்படுகின்றன என்பர். ஒலி வடிவில் அமைந்திருக்கும் மந்திரம் யாவர்க்கும் பொதுவானது. அது எல்லா உயிர்களுக்கும் விரும்பிய பயனைத் தருவது. ஒவ்வொருவரையும் சூழ்ந்திருக்கும் துன்பங்களை நீக்குவது, தனக்குரிய வலிமையைப் பெற்றுத் தருவது என்று மந்திரத்தின் சிறப்பைத் திருமந்திரம் உரைக்கிறது.

மந்திரங்கள் ஒன்றை அல்லது ஒருவரை வயப்படுத்தல், அழித்தல், மழுங்கச் செய்தல், அழைத்தல், தடுத்தல், பகைத்தல், ஏவுதல், மயக்கல், நட்பு கொள்ளச் செய்தல் என்னும் காரணங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன. அட்டகர்ம சித்தி, மாந்திரீகச் சித்தி, பராபரத்தின் சித்தி, தச தீட்சை சித்தி, அணிமா, கரிமா, லகிமா, மகிமா, பிறாத்தி, பிறாகாமியம் என்னும் ஆறும் வசியம், ஈசுவரம் ஆகியவையும் சித்தியாகும் என்று கூறப்படுகிறது.

நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை இருபத்தைந்து கட்டங்களில் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு எழுத்தாக அமைப்பர். அந்த எழுத்துக்கு மாற்றாக அதற்குரிய எண்களை அமைப்பர். அந்த எண்கள் எந்தப் பக்கத்திலிருந்து கூட்டினாலும் 51 என்னும் கூட்டுத் தொகையாகவரும்.

மந்திர எழுத்துகளுக்குரிய எண்களைக் குறிப்பிடும் போது, ‘க’ முதல் ‘ன’ வரையுள்ள தமிழ் உயிர்மெய் எழுத்துக்களுக்கு 2லிருந்து 19 வரையான எண்களைக் குறித்து மந்திர எழுத்துக்குரிய எண்ணாகக் குறிக்கின்றனர்.

இவ்வாறு எண்ணும் எழுத்தும் கட்டங்களில் இடம்பெறுகின்றன. இந்த மந்திரங்களில் தமிழ் எண்ணும் எழுத்தும் பெறுகின்ற சிறப்பினைக் கருதியே ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தரும்’ என்று உரைக்கப் பட்டுள்ளது. தமிழில் மந்திரங்கள் இல்லை என்னும் கருத்துக்கு மறுப்புரைப்பது போலத் திருமந்திரமும், கருவூரார் மாந்திரிக காவியமும், கொங்கணர் கடைக் காண்டம் போன்ற பல நூல்களும் அமைந்திருக்கக் காணலாம்.

கும்ப முறை

தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களில் பலர் மருத்துவர் களாகவும், அறிவியல் அறிஞர்களாகவும், மெய்ஞ்ஞானி களாகவும் இருந்திருக்கின்றனர். இக்காலத்தில் அறிவியல் வெற்றியாகக் கருதப்பெறும் மரபணு முறையைப் போல, சித்தர்களும் தங்கள் அறிவியல் வெற்றியாகக் கும்ப முறையைக் கூறுவர். கருப்பையிலிருந்து குழந்தை பிறப்பது யோனிமுறை என்பதைப் போல, கும்பம் என்னும் கலசங்கள் மூலம் குழந்தையை உருவாக்குவதைக் கும்பமுறை என்பர். கும்ப முறை மூலம் குழந்தையை உருவாக்கும் முறையே சித்தர்களின் அறிவியல் வெற்றியாகக் கூறப் படுகிறது. கும்பமுறை என்பது நாதம், விந்து, கந்தகம், ஆண் பாதரசம், பெண் பாதரசம் முதலிய பொருள்கள் அடங்கிய கற்பத்துடன், மேற்கண்ட பொருள்களில் மூன்றை ஒன்றாக்கிய செயநீரால், பாதரசம், கந்தகம், உப்பு ஆகிய மூன்றையும் வெண்ணெய்யாக்கி நீராக்கிய நீர் (இப்பொருள் பெண்ணிடமிருந்து எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்பொருளில் நான்கு பொருள்கள் அடங்கும் எனவும், அந்நான்கில் ஒன்று நஞ்சு எனவும், அந்நஞ்சை நீக்கினால் மூன்றே மிஞ்சும் என்றும் கூறப்படுகிறது) ஆகியவற்றைச் சேர்த்துக் கற்பம் உண்டாக்கிக் கும்பம் போன்ற பாத்திரத்தில் மருத்துவ நூல்கள் குறிப்பிடும் அளவின்படி மூட வேண்டும். சீலை மண் கொண்டு மூட வேண்டும். கும்பத்தில் ஊசியால் இரண்டு மூன்று துளைகள் இட வேண்டும். இவ்வாறு செய்து வைக்கப்பட்ட கும்பக் கலசம், இருட்டறையில் முறையாக வைக்கப்பட வேண்டும். இந்த கும்பக் கலசத்தில் முன்னூறு நாள்கள் கழிந்த பின் குழந்தை உருவாகும். கும்பக் கலசத்தில் வைக்கப்படும் கற்ப மருந்துகளில் நாதம் விந்து ஆகிய இரு பொருளும் 4, 3 என்னும் விகிதத்தில் கலக்கப் பெற்றால் உருவாகும் குழந்தை ஆண், பெண் என்றாகும். கும்பக் கலச முறையில் உருவாகும் குழந்தை சுமார் 3 அடி உயரம்தான் வளரும். இம்முறையில் உருவானவர்களாக அகத்தியர், முருகன் ஆகியோரைக் குறிப்பிடுவர். இவர்கள் இருவரும் குள்ளமானவர்கள் என்பர். அதனால் அகத்தியரைக் கும்பமுனி, குள்ளமுனி, கலசமுனி என்னும் பெயர்களால் குறிப்பிடுவர்.

கலசத்தில் வைக்கப்படும் பொருள்களில் ஒன்றான கந்தகத்தின் பெயரே கந்தன் என்று முருகனைக் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. கற்பம் என்பது நாதம், விந்து ஆகியவற்றால் ஆனது. இந்த நாதமும் விந்தும் தேவ உப்பு, கந்தகம், ஆண் பெண் பாதரசம் என்னும் கொடிய நச்சுப் பொருளால் ஆனது. விஷம் என்னும் நஞ்சு நீக்கப் பெற்ற மேற்கண்ட பொருள்களால் முறைப்படிச் சேர்க்கப்பட்ட பொருள்களுக்கு முப்பு என்றும், கற்பம் என்றும் பெயர். கற்பம் கசப்புத் தன்மை கொண்டது. கொடிய காரமாகவும் மாற்றலாம். இனிப்பாகவும் மாற்றலாம்.
அப்போது, அது, அமிர்தம் எனப் பெயர் பெறும். இக்கற்பம், ஆக்கல், அழித்தல் ஆகிய இரண்டு வல்லமைகளைப் பெற்றிருக்கும். இக் கற்பத்தினால், குழந்தை உருவாக்கப் படுவதுடன் இதனை உண்ணவும் செய்யலாம். இக் கற்பத்தை உண்டவர்கள் பல்லாண்டு காலம் உயிர் வாழலாம். இக்கற்ப முறையால் பிறந்த அகத்தியரும் முருகனும் அதையே உண்டு வந்ததால் அவர்களைக் கற்பதேகி என்றும் வழங்கினர். இக்கற்பம், உடம்பினுள் முழுமையான வளர்ச்சி யடைந்த திசுக்களிலுள்ள அணுக்களுக்குப் புதிய ஆக்கத்தைக் கொடுப்பதுடன் மறு வளர்ச்சி நிலையைத் தூண்டும் உயிர்ப் பொருளாகப் பயன்படுகிறது.

இவ்வாறு, உயிரின் மூலங்களைக் கண்டறிந்து அது எந்த எந்தப் பொருளின் சேர்க்கையினால் உருவாகிறது என்பதைக் கொண்டு கற்பங்கள் உருவாக்கி, அதன் மூலம் கும்ப முறையில் குழந்தையை உருவாக்கும் முறையில் சித்தர்கள் வெற்றியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கூற்றினுள் அடங்கிய உண்மைகளை அறிவியல் அறிஞர்கள், ஆய்வு செய்து கண்டறிந்து வெளியிட்டால் அதன் பயன்கள் முழுமையானதாக இருக்கும்.

சித்தர் அறிவியல்

சித்தர்கள், மனித உடலையும் அவ்வுடலைப் பேணி பாதுகாக்கப் பயன்படும் மருந்துப் பொருளையும் பல்வேறு நிலைகளில் கண்டறிந்துள்ளனர்.

நிலத்திலிருந்து கிடைக்கக் கூடிய பொருள்கள் எல்லாம் அந்த நிலத்தில் தோன்றிய மனித உடலுக்கு ஏற்றவை என்பது பொருந்தாது. எல்லாப் பொருளையும் ஏற்றவையாக மாற்றிக் காட்டுவது அறிவியல் சார்ந்த ஆற்றலாகும்.

மரணம்

மனிதன் என்று தோன்றுகின்றானோ அன்றே அவனின் இறப்பும் எழுதப்படுகிறது என்பர். மனித உயிர் உருவாகும் போதே, உயிரின் கருவில், பிறப்பு, இளமை, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய அறு பருவங்களும் அமைகின்றன.

பேறு யிளமை யின்பம் பிணி மூப்பு சாக்காடு
ஆறுங் கருவில மைப்பு

என்று குறிப்பிடப்படுகிறது. பிறப்பும், இறப்பும் மாறி மாறி வரும். உறங்குவது போலும் உறங்கி விழிப்பது போலும் எனக் கண நேரத்தில் அவ்விரண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்றும் கருதப்பட்டது.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

என்னும் குறள் கூறும் கருத்து சித்தர்களுக்கு உடன்பாடானதன்று.


மரணத்தை வெல்லுதல்

மரணம் என்பது இயற்கை. அதை மாற்றிக் காண்பதே சித்தர்களின் கற்ப சாதனை என்பது போல், கற்பம் என்னும் மருத்துவ முறைகளினால், மரணத்தை வெல்ல முடியும் என்று சித்தர்கள் கூறக் காணலாம்.

வேம்புக் கற்பம் என்னும் மருந்தை உண்டுவந்தால் மரணமில்லை என்கிறது கற்பவிதி.

கொண்டிட்டால் வைரம்போல் இறுகும் தேகம்
குறிப்பாகக் கண்ணிரண்டும் சிவப்பு மாகும்
நன்றிட்டால் நரம்பதுவு முறுக்கு மாகும்
நரைதிரையும் மாறியே ஞான முண்டாம்
உன்றிட்டால் யோகத்தில் உறுதி யாகும்
ஒரு காலும் சாவுமில்லை உண்மை தானே

என்று மரணத்தை வெல்லும் வழியைக் கண்டறிந்திருப்பது அறிவியல் முறையாகும்.

உடலும் உயரமும்

ஒவ்வொரு மனிதரும் அவரவர் கையின் அளவுப் படி தொண்ணூற்றாறு அங்குல உயரமே என்பர். (அவரவர் கையின் விரல் பருமன் ஒரு அங்குலம் எனக் கூறப்படும்.

அங்குலம், சாண், முழம், மார் என்பதும் கையின் அளவைக் கொண்டே கணிக்கப்படும்.) ‘எண் சாண் உடலம்’ என்பதும், ‘எறும்புக்கும் தன்கையால் எட்டு’ என்பதும் உடலின் உயரத்தைக் குறித்தே வழங்கப்படும்.

சென்ம சரீ ரந்தொண்ணூற் றாற தென்னச்
செப்புமங் குலமவர்கள் கையாலே தான்

என்பர், இந்த உயரத்தின் அளவு என்பது எல்லோருக்கும் பொது என்று உரைக்கப்படுகிறது. இவ்வாறு, ஒவ்வொரு வரின் உயரமும் ஒத்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதற்குச் சித்தர்கள் கூறும் முறை அறிவியல் முறைக்கு ஒத்ததாகவே இருக்கும்.

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரமத்தே தோன்றும் அவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கிரம் எட்டும் எண்சாண் அது ஆகுமே

ஆணும் பெண்ணும் கூடும் போது நாடியில் தோன்றும் சுக்கிலம் சுரோணிதம் என்னும் இரண்டும் கலந்து பெண்ணின் கருப்பையில் கருவாக அமையும்.

அக்கரு அமையும் வேளையில், பெண் விடுகின்ற மூச்சுக் காற்று, 12 அங்குல கன அளவு உடம்புக்குள் செல்கிறது. அதில் 8 அங்குல கன அளவு மட்டும் பெண்ணின் உடலுக்குள் தங்கிவிடுகிறது. மீதமுள்ள நான்கு அங்குல கன அளவுக் காற்று வெளியே வந்துவிடுகிறது.

உடம்பில் சேர்ந்த 8 அங்குல கன அளவு காற்று, கருவாக அமைந்த குழந்தையின் உடலாக அமைந்து எட்டுச் சாண் என்ற அளவை அமைக்கிறது என்பது திருமூலர் கண்டறிந்த உயிரியல் முறையாகும்.

எட்டு

சித்தர்கள் கண்ட அறியியல் தத்துவத்தின் படி எட்டு என்பது அடிப்படைக் கணக்காகக் கருதப்படுகிறது. மனித உயிர் எட்டை அடிப்படையாகக் கொண்டு பிறப்பதைப் போல, அந்த உடம்புக்கு ஏற்றவையும் எட்டு என்றே கருதினர்.

சொல்லிய நாழி கொண்டு
தூணியில் எட்டொன் றாக்கி”

நன்னீர் விட்டே எட்டொன்றாய்
நாடிக் காய்ச்சிக் கொள்வீரே

என்று, மருந்துப் பொருள்கள் எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால், உடம்புக்கு மருந்தாகும். இல்லாவிட்டால் அவை விருந்தாகும் (உணவு) என்று கண்டனர்.

இவ்வாறு கண்டறியப் பெற்ற எட்டின் தத்துவம் மருந்துக்கு மட்டுமல்ல. மற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும். சாதாரணமாகக் குடிக்கப் பயன்படுகின்ற வெந்நீர், எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மருந்து என்று கண்டறியப்பட்டுள்ளது.

இயம்பிட எளிதே வெந்நீர் இயம்புவன் சிறிது கேண் மின்
நயம் பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்
சயம் பெற எட்டொன் றாக்கித் தான் குடித் திடுவீ ராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்

என்று எந்தவிதமான மருந்துப் பொருளையும் சேர்க்காமல் தண்ணீரை மருந்தாக மாற்றும் முறையைக் கண்டறிந்துள்ளனர். தாயின் வயிற்றில் கருவாகத் தோன்றும் போது எந்த முறையில் தோன்றினோமோ அந்த முறையில் அமைவதே மருந்து எனக் கருதியதால் இந்தச் சிந்தனை தோன்றி இருக்கலாம். எனவே, இதுவும் அறிவியல் அடிப்படையாகவே இருக்கக் காணலாம்.

விந்து

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒரு மூலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றன. அந்த மூலத்தை உயிர் மூலம் எனலாம்.
அந்த உயிர் மூலத்துக்குச் சித்தர்கள் ‘விந்து’ எனக் குறியடையாளம் கொள்வர். விந்து உயிரையும் உடலையும் உருவாக்குவது மட்டுமல்ல பாதுகாக்கவும் செய்கிறது. ‘விந்து கெட்டவன் நொந்து சாவான்’ என்பது பழமொழி.

உடம்பில் ஒரு துளியளவு விந்து இருக்கும் வரை உயிர் உடலைவிட்டு நீங்காது என்பது சித்தர்கள் கொள்கை.

உந்தனுடைய விந்தழிந்தால் யெல்லாம் போச்சு
உண்டதெல்லாம் பாழாச்சு உறவும் போச்சு
விந்துதனை இழந்து பல பிணிக்குள் ளாகி
மெலிந்து கெட்டுப் போகாமல் விள்ளு வேனே

விந்து அழிந்து விட்டால் நன்மையெல்லாம் போய்விடு வதுடன் நோய்கள் வந்தடையும் என்று எச்சரிக்கக் காணலாம். விந்து பிறப்புக்காக மட்டுமே பயன்படுகிறது என்னும் கருத்துக்கு மாறாக, விந்து பற்றிய அறிவியல் உண்மையாக உரைக்கக் காண்கிறோம்.

அணுச் செயல் மாற்றம்

சித்தர்கள், அணிமா முதலிய எட்டுவகையான சித்துகளில் வல்லவர்கள். தம் உடம்பின் இரகசியங்களை அறிந்து தம் விருப்பப்படி அணுவின் செயல்களை மாற்றிக் காணும் ஆற்றல் பெற்றவர்கள். அறிவியலில், அணுக்கருச் சிதைவு (Neuclear Fission) என்னும் முறையின்படி ஒரு பொருளின் கருவைச் சிதைப்பதன் மூலம் அப்பொருளை வேறு பொருளாக மாற்றலாம் எனக் கண்டுள்ளனர்.

ஒரு பொருளைப் பற்றிய அறிவும் அப்பொருளின் கருவைப் பற்றிய அறிவும் பெற்றவர்கள் எப்பொருளையும் வேறொன்றாக ஆக்கல் கூடும். இதேபோல் மனிதர்க்கு இன்றியமையாக் கருவாக இருப்பது DNA (De(s)oxy ribonucleic acid) எனப்படும் உயிர்ப் பொருளாகும். இதுவே இயல்புகளையும் குணங்களையும் நிர்ணயிப்பது என்பது அறிவியலார் கூற்று. எனவே ஒவ்வொரு உயிரின் DNA வையும் பற்றிய தெளிந்த அறிவு பெற்றவர்கள் தம் கருவை DNA மாற்றுவதன் மூலம் வேண்டிய வடிவங்களில் மாற்றிக் கொள்ளுதல் கூடும். இம்முறையில் ஒருவர் ஈயாகவும் யானையாகவும் உருவெடுத்தல் கூடும்.

பரிசோதனைக் குழாயில் (Test Tube) செயற்கை முறையில் குழந்தையை உண்டாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் அறிவியலுக்கு இந்த தத்துவம் விளங்காததாகவோ புரியாததாகவோ இருக்க முடியாது. இவ்வுடம்பு கண்ணுக்குத் தெரியாத நிலையும் பெறுதல் கூடும்.

பொருள்கள் மூன்று நிலையினை யுடையன. ஒளிபுகும் (ஒளி ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்துக்கு ஊடுருவிச் செல்வது) (Transparent), 2. ஒளி புகாப் பொருள் (Opaque), 3. ஒளி கசியும் பொருள் (Translucent) இம்மூன்று நிலைகளில் நம்முடம்பு ஒளிபுகாப் பொருளில் அடங்கும். யோகப் பயிற்சியின் மூலம் உடம்பின் இயல்பை மாற்ற முனையும் போது ஒளி புகும் பொருளாக மாறுமேயானால் கண்ணுக்குப் புலனாகா வடிவமாகும். இந்நிலையின் உயர்நிலையே காற்று வடிவமாகும். இதனை அருவமாதல் (Translucent) என்பர். பஞ்ச பூதங்களில் எந்த வடிவமாகவும் சித்தர்களால் இருக்கக் கூடும் என்பது சித்தர்களது உறுதியான நம்பிக்கை. வேறொருவர் காணாமல் உலகத்துலாவலாம் எனத் தாயுமானவர் கூறுவதும் காண்க.

வள்ளலார் ஒளியுடம்பு

வடலூர் இராமலிங்க வள்ளலார் வழக்கு ஒன்றுக்காக நீதி மன்றம் வந்த போது, அவரைப் புகைப்படும் எடுத்தனர். படச்சுருளை எடுத்துப் பார்த்த போது அது வெள்ளையாக இருந்ததென்பர். காரணம், சித்தர் நிலைக்கு உயர்ந்த வள்ளலார், ஒளி வடிவாக இருந்ததே என்பர்.

நோயை அறிவதிலும் அந்நோயைப் போக்கும் மருந்துகளைச் செய்வதிலும் தங்கள் ஆற்றலைப் பயன் படுத்திய சித்தர்கள், நோய் வருவதற்கான காரணத்தை அறிவதிலும் சிறந்திருந்தார்கள். வந்த நோயையும் போக்கும் வழியையும் புலப்படுத்தும் அறிவியலே நோயின் மூலத்தையும் அறிவுறுத்துவதாகும். அவ்வாறே மேக நோய் உண்டாவதற்கான ஏதுக்களைக் குறிப்பிடும் போது பதினெட்டு வகையான ஏதுக்களைக்கூறி
பதினெட்டு வகை மேகநோய் என்றனர். அதாவது,

மாதர் மயக்கம்,
அச்சம்,
போதைப் பொருள்,
மீன்,
இறைச்சி,
நெய்,
பால்,
சீத உணவு,
பதனழிந்த தினை,
மிகுந்த உணவு,
உடல் பருமன்,
இனிப்பு,
தூக்கமின்மை,
பசியின்மை,
அதிக பசி,
அதிக உடல் உறவு,
போகமின்மை
கடின உழைப்பு

என, சித்தர்கள் மேற்கொண்ட முறைகள் அனைத்தும் இன்றைய அறிவியலோடு ஒப்பிட்டுக் காணும் போது, சில அறிவியலோடு ஒத்துப் போவதாகவும் சில அறிவியலால் அறியாதவையாகவும் இருக்கக் காண்கிறோம். வாழ்வில் நோய் என்னும் துன்பத்தை அண்ட விடாமல் தடுக்கும் முயற்சியாகக் கற்பங்கள் விளங்குகின்றன.

மரணத்தை வென்று அழிவிலிருந்து மனிதர்களை காக்கும் முறையாக யோக முறைகள் அமைகின்றன.

ஆக, கற்பமும் யோகமும் என உடலியல், உயிரியல் ஆகிய இரண்டு அறிவியல் முறைகள் முழுமையாகக் கண்டறியப் பட்டிருக்கின்றன. சித்தர் நெறி என்பது, அது தொன்மையான அறிவியலார் மேற்கொண்ட வாழ்க்கை நெறி எனக் கூறலாம்.

தொகுப்புரை

பழந்தமிழகத்தில் மருத்துவத்தையும் யோக முறை களையும் தோற்றுவித்தவன் ‘சிவன்’எனத் தெரிகிறது. அவனே, முதல் சித்தனும் ஆவான். அவனின் நெறியே சிவநெறி ஆயிற்று.

அவனைத் தொடர்ந்து மருத்துவத்தையும் யோகத்தையும் பயின்றவர்கள் பலர்.

அவர்களைப் பற்றிய விபரங்கள் தெளிவில்லை. ‘திருமூலர்’ என்பவரால், மருத்துவமும் யோகமும் நடைமுறைக் கல்வியும் பரம்பரை முறையில் பயிற்றுவிக்கப் பட்டிருக்கின்றன.

சித்தர் என்னும் மரபுக்கு முதன்மையானவராகத் திருமூலரைக் குறிப்பிடலாம். அவரைத் தொடர்ந்தே சித்தர் மரபு தோன்றியிருக்கிறது.

வாழ்க்கைக்குப் பயனுடைய மருந்தும், மரணத்தை வெல்லும் மன ஆற்றலான யோகமுறையும், அமைதிக்கும் மனித நேயத்துக்கும் புகழுக்கும் காரணமான சித்தர்களின் புறவொழுக் கங்களும் சிறப்புக்குரியவை. அனைவராலும் மேற்கொள் வதற்கு ஏற்றவை. உரிய முறையில் ஆய்வுகள் நிகழ்த்தி தேவையான திருத்தங்களை நிகழ்த்தி சித்தர்நெறியை வாழ்வியல் நெறியாகக் கொள்வது பயனைத்தரும்.




நன்றி: 

Email-ல் ”சித்தர் நெறி” என்ற தொகுப்பை அனுப்பிய
கோயம்புத்தூர் திரு. முருகா மாரியப்பன் அவர்கள்;

மற்றும்

சைவப்  பெருமக்கள்  பேரவைப் பொன்விழா  அறக்கட்டளை
Saiva Perumakkal Peravai Ponvizha Trust
Muruga Bhavanam, 308,  Kandasamy Lay-out
Pappanaicken Palayam, Coimbatore – 641 0377





No comments:

Post a Comment