Monday, June 16, 2014


ஹைக்கூ எழுத ஆசையா?

ஹைக்கூ - ஜப்பானிய கவிதை வடிவம். இதன் மிகச் சிறிய வடிவம் உலகம் முழுவதும் கவர்ந்து இப்போது உலகின் எல்லா மொழிகளிலும் ஹைக்கூ எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை எல்லோரும் எழுத முயல்வதன் காரணம் ஹைக்கூ சிறியதாகவும், எளிமையாகவும், இயல்பானதாகவும், எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவற்றைப் புதிய கோணத்தில் பார்க்க வைப்பதாகவும் இருப்பது தான். ஆனால் ஹைக்கூ-விற்குத் தான் ஏராளமான விதிமுறைகள் உண்டு. கவிதைக்கு இடையூறாக இல்லாதவரை விதிமுறைகள் நல்லது தான். ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்னதைப் போல 'விதிமுறைகள் இல்லாத கவிதை, நெட் இல்லாமல் டென்னிஸ் ஆடுவதைப் போன்றது'. மேலும் பாஸோவின் கோட்பாட்டையும் (ஜப்பானின் சிறந்த ஹைக்கூ கவி) நினைவில் கொள்வது நலம்.

'விதிமுறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்; பின் அதை மறந்து விடுங்கள்'.

மறப்பதற்கு முன் விதிமுறைகளைக் கற்பது அவசியம்.

எத்தனை விதிமுறைகள்?

'ஒரு சாதாரண உரைநடை வாக்கியத்தை மூன்று வரிகளில் உடைத்து எழுதினால் ஹைக்கூ ஆகி விடுமா?' என்ற கேள்விக்குக் கூட நேரடியாக பதில் கூற முடியாத அளவிற்கு இதன் விதிமுறைகள் மாறி விட்டன.

ஹைக்கூ-விற்கு விதிமுறைகள் மிக அதிகம். எல்லா விதிமுறைகளையும் மொத்தமாகப் பின்பற்ற யாராலும் இயலாது. பல விதிமுறைகள் ஒன்றுக்கொன்று முரணானவை. ஒரே சந்தத்தில் பின்பற்ற முடியாதாவை. ஆகையால் எழுதுபவரே தனக்கு ஏற்ற விதிமுறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கு ஏற்ற சில விதிகளை எடுத்துக் கொண்டு உங்கள் எண்ணங்கள், பாதிப்புகள், உணர்வுகளை எழுதத் தொடங்குங்கள். விதிகளை மீறாதீர்கள். கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் உங்களுடைய எல்லா ஹைக்கூவும் ஒரே மாதிரி இருப்பதாக உணர்வீர்கள்! அப்படி உணர்ந்தால் உங்களுடைய டென்னிஸ் நெட்டை இன்னும் கொஞ்சம் உயர்த்த வேண்டும் என்று பொருள். மேலும் ஒன்றிரண்டு விதிகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இது உங்களுக்குப் பிடித்த ஹைக்கூ கவிஞரின் கவிதைகளில் இருந்து நீங்கள் உணர்ந்து கொண்ட விதியாக கூட இருக்கலாம்.

இதோ சில விதிகள்:

ஒரே வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள் 5 - 7 - 5 என்ற வரிசையில்.
சொற்கள் எண்ணிக்கையில்லாமல் மூன்று வரிகள் - நடு வரி மட்டும் சற்று நீளம்.
மூன்று வரிகள் மேலிருந்து கீழாக.
ஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.
மூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாக இல்லாதிருத்தல்.
வாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம் வரியின் கடைசியில். ஆனால் இரண்டிலும் ஒரே சமயத்தில் கிடையாது.
எப்பொழுதும் நிகழ்காலத்தில் எழுதுதல்.
தெளிவான காட்சிகளையே உபயோகித்தல்.
ஜென் கற்று, வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்சிகளை விவரித்தல்.
உலகியல் காட்சிகளை அப்படியே கூறுதல்.
இயற்கைக் காட்சிகளை மட்டுமே உபயோகித்தல் (மனிதர்கள் இல்லாமல்).
எதுகை மோனை இல்லாமல் எழுதுதல்.



தங்கா:

ஜப்பானில் 8ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இறைவனையும், தங்கள் மன்னர்களையும் புகழ்ந்து 'தங்கா' (tanka) பாடும் வழக்கம் இருந்தது. இது 5 வரிசையில் 5-7-5-7-7 வார்த்தை எண்ணிக்கையில் பாடப்படுவது. ஜப்பானிய அரசவையில் மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. 9வது முதல் 12ம் நூற்றாண்டுகள் வரை 'தங்கா' ஜப்பானியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

ரெங்கா:

தங்கா பிரபலமாக இருக்கும் போது, சில கவிதைப் போட்டிகளில் ஒரு கவிஞர் தங்காவின் முதல் 5-7-5 பகுதியைப் பாட மற்றொருவர் அடுத்த 7-7 பகுதியை பாடி முடிக்க, இது ஒரு உற்சாகமான போட்டியானது. இதோடு நிற்காமல், மற்றொருவர் இதற்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு 5-7-5 கவிதை பாட, இது சங்கிலி கவிதையானது. சபைகளில் இது மிகவும் உற்சாகமளிப்பதாக இருந்ததால் சில சமயம் 1000 அல்லது 10,000 சங்கிலித் தொடர்களாகக் கூட நீண்டது. இந்த வகை பாடல்கள் 'ரெங்கா' என்றழைக்கப்பட்டது.

ஹொக்கு - ஹைக்கை:

14ம் நூற்றாண்டு வாக்கில் 'தங்கா' காணாமல் போய் 'ரெங்கா' மிகப் பிரபலமானது. பல்வேறு விதிகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு அமைப்புகள் தோன்றி நாளடைவில் பிரிந்து போட்டி அணிகள் உண்டாயின. சிறப்பான ரெங்கா சங்கிலித் தொடர் அமைய ஆரம்ப வரிகள் (முதல் 5-7-5 பகுதி, இது 'ஹொக்கு' எனப்படும்) மிகச் சிறப்பானதாக இருப்பது அவசியம் என்பதால், சிறந்த 'ஹொக்கு'க்களைக் கவிஞர்கள் சேகரித்து வைத்துக் கொண்டார்கள். இதைத் தொடர்ந்து ரெங்காவில் இடையில் உள்ள சிறந்த 5-7-5 பகுதிகளையும் (இது 'ஹைக்கை' எனப்படும்.) சேகரிக்க ஆரம்பித்தார்கள்.

சபையில் 'ரெங்கா' நடைபெறும் போது ஆளாளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புலமையைக் காட்ட ஆசைப்பட்டதால் (சில பெரிய மனிதர்களின் 'புலமை' ஆசையைத் தவிர்க்க முடியாது) ரெங்கா பகுதிகளின் தரம், மிகுந்த ஏற்ற இறக்கங்களோடு இருந்தது. இதனால் தரமான 'ஹொக்கு', 'ஹைக்கை' பகுதிகளின் சேகரிப்பு அதிகரித்தது. ரெங்கா தொடரிலிருந்து தனியாகப் பிரித்தெடுத்ததால் சில சமயம் இது சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருந்தாலும் 17-18ம் நூற்றாண்டு ரெங்கா தொடர்களை விட மேலானதாக இருந்தது.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரெங்கா நின்று போனது. 5-7-5 சொற்றொடர் கவிதைகள் அதிகமாக வலம் வரத் துவங்க, ஒரு கவிதையை 'இது ஹொக்குவா, ஹைக்கையா?' என்ற சர்ச்சைகள் அதிகமானது. இந்த விவாதத்தைத் தவிர்க்க ஹைக்கூ என்ற புதிய பெயர் உண்டானது.

இன்றும் ஜப்பானிய ஹைக்கூ 5-7-5 சொற்றொடர்களைக் கொண்டுதான் எழுதப்படுகிறது. ஜப்பானிய மொழி ஹைக்கூவில் ஒரு வரி செங்குத்தாக (மேலிருந்து கீழ்) எழுதப்படும். மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் போது இவைகளை பின்பற்றுவது இயலாததாக இருப்பதால் தமிழில் (ஆங்கிலத்திலும்) 5-7-5 கட்டுப்பாடு தீவிரமானதாக இல்லை.





No comments:

Post a Comment