சில கர்னாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை ராகங்களுக்கு உள்ள
தொடர்புகளைக் கீழே காணலாம்.
கர்னாடக 'கல்யாணி' ராகம் ஹிந்துஸ்தானியில் 'யமன்' என்று கையாளப்படுகிறது. கர்னாடக 'தோடி'தான் ஹிந்துஸ்தானியில் 'பைரவி என்று அழைக்கப்படுகிறது.
அதுபோல, கர்னாடக இசையின்
மோஹனம், ஹிந்துஸ்தானியில் பூபாளி என்றும்,
ஹிந்தோளம் , மால்கௌன்ஸ் என்றும்,
சங்கராபரணம், பிலவால் என்றும்,
சுபபந்துவராளி, தோடி என்றும்,
சக்கரவாகம், ஆகிர் பைரவ் என்றும்,
தேவகாந்தாரி, பீம்ப்ளாஸி என்றும்,
ப்ருந்தாவன சாரங்கா, ஹமீர் என்றும்,
சுத்த சாவேரி, துர்கா என்றும்,
நட பைரவி, அசாவரி என்றும்,
சஹானா, ஜேஜேவந்தி என்றும்,
தர்மாவதி, மதுவந்தி என்றும்,
ஹம்சாநந்தி, மார்வா என்றும்,
பந்துவராளி, பூர்வி என்றும்,
மாயாமாளவகௌளை, பைரவ் என்றும்,
ஹரிகாம்போஜி, கமாஜ் என்றும்,
கரஹரப்ரியா, காபி என்றும்,
கம்பீர நாட்டை, திலங் என்றும்,
வலஜி, கலாவதி என்றும்,
முகாரி, ஜோன்புரி என்றும்
அழைக்கப்படுகின்றன.
ஆனால், மேற்கண்ட ராகங்களின் ஆரோகண, அவரோகணங்கள், இரண்டு இசைகளிலும் ஏறத்தாழ ஒன்றாக இருந்தாலும், பாடலைப் பிரயோகிக்கும் முறையிலும், கமகப் பிரயோகங்களிலும், பாடும் பாணியிலும், இசையை வெளிப்படுத்தும் விதத்திலும் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன.
சில ராகங்களின் பெயர்கள், இரண்டு இசைகளிலும் ஒன்றாக இருந்தாலும்,
ஒன்றுக்கொன்று துளியும் சம்பந்தமில்லாமல் இருக்கின்ற வினோதத்தையும் காண முடியும்.
எடுத்துக்காட்டாக, தோடி என்ற பெயர் கர்னாடகம், ஹிந்துஸ்தானி என்ற இரண்டிலும் இருந்தாலும், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை. ஹிந்துஸ்தானி தோடி என்பது, கர்னாடக சுபபந்துவராளிக்குச் சமம் ஆகும். இரண்டு முறைகளிலும் பைரவி என்ற பெயர் இருந்தாலும், இரண்டும் முரண்பட்டவை. கர்னாடக தோடிக்கும், ஹிந்துஸ்தானி பைரவிக்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் ஹிந்துஸ்தானி லலித் ராகமும், கர்னாடக லலிதா ராகமும் வேறு வேறானவை.
ஆனால், சில ராகங்கள், இரண்டு இசை முறைகளையும் பொறுத்த மட்டில், தனித்துவம் பெற்று விளங்குகின்றன. கர்நாடக இசை ராகங்களான பைரவி, வராளி, சுருட்டி, பேகடா, தன்யாசி, அடாணா, நாயகி, நாட்டக் குறிஞ்சி, கௌளை போன்றவைகளுக்கு மிகச் சமமான ராகங்கள் ஹிந்துஸ்தானியில் இல்லை.
அதே போல, ஹிந்துஸ்தானி ராகங்களான மியான் கீ மல்ஹர், பகாடி, கௌட் சாரங், சய நாட், சங்கரா, மரு சிஹாக், ராம்களி, திலக் கமோட் போன்றவைகளுக்குச் சமமான கர்னாடக ராகங்கள் இல்லை.
No comments:
Post a Comment